Economy, business and finance
டாடா சன்ஸ் தலைவர் சந்திரசேகரன் பதவிக்காலம் 5 ஆண்டு நீட்டிப்பு: நோயல் டாடா எதிர்ப்பு

புதுடில்லி: டாடா சன்ஸ் தலைவராக உள்ள சந்திரசேகரன், பதவிக்காலத்தை அடுத்த 5 ஆண்டுகள் நீட்டிக்க வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் தலைவராக சந்திரசேகரன் உள்ளார். 63 வயதாகும் அவர் டாடா குழுமத்தில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 10 ஆண்டு காலம் தலைவராகவும் உள்ளார். இந்த பதவிக்காலம் 2027 பிப்.,20 ல் முடிவடைய உள்ளது. இந்த பதவியில் தொடர விரும்பவில்லை என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவித்து இருந்தார். இதனையடுத்து புதிய தலைவரை தேடும் பணியில் டாடா சன்ஸ் ஈடுபட்டு வந்தது.
இந்நிலையில், டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக மீண்டும் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டு உள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் இந்த பதவியில் தொடர்வதற்கு மும்பையில் நடந்த டாடா சன்ஸ் வாரியக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் டாடா சன்ஸ் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிடப்படவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
டாடா சன்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: செப்.,17 அன்று நடந்த வாரிய கூட்டத்தில் தனது முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கையை சந்திரசேகரன் ஏற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு தலைவராக மீண்டும் நியமிக்க டாடா சன்ஸ் கூட்டத்தில் பெரும்பான்மை ஓட்டுகள் வாயிலாக தீர்மானிக்கப்பட்டது எனத் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் சந்திரசேகரன் மீண்டும் நியமனம் செய்வதற்கு, டாடா அறக்கட்டளை தலைவர் நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
டாடா அறக்கட்டளை வெளியிட்ட அறிக்கையில், '' அறக்கட்டளை நியமித்தஇயக்குனர்களில் ஒருவரான நோயல் டாடா, வாரிய கூட்டத்தில் சந்திரசேகரன் நியமனத்திற்கு எதிர்த்து அளித்த ஓட்டை எந்தவித அடிப்படையும் இன்றி செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.,2027 க்கு பிறகு பதவியில் தொடர விரும்பவில்லை என்ற சந்திரசேகரனின் முடிவும் அதை ஏற்றுக் கொண்டதும் இறுதியானது. அறக்கட்டளையின் முடிவு மாறாதது. சந்திரசேகரனை மீண்டும் நியமிப்பது சட்டவிரோதமானது,'' எனத் தெரிவித்துள்ளது.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் 66 சதவீத பங்குகளை டாடா அறக்கட்டளை வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.