'அண்ணாமலை பல்கலை பொறியியல் புலத்தை ஐ.ஐ.டி-க்கு இணையாக்க வேண்டும்' -டாடா கன்சல்டன்சி சிஇஓ பேச்சு

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பொறியியல் புலத்தில் முதலாம் ஆண்டு இளநிலைப் பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்க விழா பொறியியல் புல கலையரங்கில் நடைபெற்றது.
விழாவுக்கு பொறியியல் புல முதல்வர் பேராசிரியர் சி.ஜி.சரவணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவரும், மும்பை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான தீபேஷ் கிரேன் நந்தா கலந்து கொண்டு முதலாம் ஆண்டு வகுப்புகளை தொடங்கி வைத்தார்.
விழாவில் அவர் மாணவர்களிடம் பேசுகையில், மாணவர்கள் கல்வியை நன்கு புரிந்து கொண்டு ஆர்வத்துடன் பயின்றால், தங்களைப் போலவே உயர்ந்த நிலையை அடைய முடியும் என்றார். மேலும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சிக்கும், மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தேவையான பயிற்சிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவித்தார்.
மேலும், மேம்பட்ட மென்பொருட்களுக்கான உரிமங்கள் பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் என்றும், நிறுவனத்தின் ஆதரவுடன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். பல்கலைக்கழகத்தில் தேவையான வசதிகளை மேம்படுத்தி, ஐ.ஐ.டி.களுக்கு இணையான உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல அரசு ஆதரவைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
அத்துடன், பல்கலைக்கழகத்தில் சூரிய மின்தகடுகள் அமைப்பதற்கு நிறுவனம் உதவி செய்து, மின்சாரச் செலவைக் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.
விழாவில் பேராசிரியர்கள் மற்றும் துறைத் தலைவர்கள் டி. பாலசுப்ரமணியம், சரவணன், மணிக்குமாரி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பாலசங்கர் நன்றி கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)