Weather
பருவமழையை நம்பி சாகுபடி பணியில் விவசாயிகள்... தீவிரம் :முன்கூட்டியே நீர்நிலைகளை சீரமைப்பது அவசியம்

ராமநத்தம்:வடகிழக்கு பருவமழையை நம்பி பயிர்களை சாகுபடி செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ள நிலையில், பருவமழை துவங்கும் முன் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களூர் மற்றும் நல்லுார் ஒன்றியங்களில் 130 ஊராட்சிகள், 200க்கும் அதிகமான துணை ஊராட்சிகள் உள்ளன. இப்பகுதியினர் பெரும்பாலும் விவசாயம் மற்றும் அதை சார்ந்த கூலித் தொழில்களை செய்து வருவாய் ஈட்டுகின்றனர். இப்பகுதி விவசாயிகள் ஆறு மற்றும் கிணற்று நீர் பாசனம் மூலம், நெல், கரும்பு, மரவள்ளி, மஞ்சள் செடிகளை சாகுபடி செய்கின்றனர். மேலும், தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவமழையின் போது கிடைக்கும் ஈரப்பதத்தை பயன்படுத்தி மானாவாரி பயிர்களான மக்காச்சோளம், பருத்தி, வரகு, எள், வேர்க்கடலையை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.
ஏமாற்றமும், எதிர்பார்ப்பும் தென் மேற்கு பருவமழை காலமான ஜூன்-செப்டம்பர் மாதங்களில் பெய்யும் மழையின் மூலம் குறுகிய கால பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்வது வழக்கம். நடப்பாண்டு, 'எல் நினோ' தாக்கத்தால் தென் மேற்கு பருவமழை முழுமையாக பெய்யவில்லை. கடந்தாண்டின் அளவில் பாதி கூட மழையளவு இல்லாததால் தென்மேற்கு பருவமழையை நம்பிய விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வடகிழக்கு பருவமழை காலமான அக்டோபர்- டிசம்பர் மாதங்களில் பெய்யும் மழையின் மூலம் மானாவாரி பயிர்களை அதிக பரப்பில் விவசாயிகள் சாகுபடி செய்வர். நடப்பாண்டு 'எல் நினோ' தாக்க வெப்பம் காரணமாக, வடகிழக்கு பருவமழை அதிகளவில் பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதனை நம்பி மங்களூர், நல்லூர் ஒன்றியங்களை சேர்த்து மானாவாரி பயிர்களான மக்காச்சோளம் 65 ஆயிரம் ஏக்கர்; பருத்தி 850 ஏக்கர்; வரகு 3,700 ஏக்கர்; உளுந்து 3,550 ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்து, அதிக மகசூல் கிடைக்குமென விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
நடவடிக்கை தேவை மங்களூர் ஒன்றியத்தில் வெள்ளாறு, நல்லுார் ஒன்றியத்தில் கோமுகி, மணிமுக்தா, மயூரா முக்கிய ஆறுகளாக உள்ளது. சேலம் மாவட்டத்தில் பெய்யும் மழைநீர் வெள்ளாறு வழியாக தொழுதூர் அணைக்கட்டு, வெலிங்டன் ஏரிக்கு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் பெய்யும் மழைநீர், கோமுகி மற்றும் மணிமுக்தாறு வழியாக கீழக்குறிச்சி, மேமாத்தூர் அணைக்கட்டுக்கு வருகிறது. அதனை மடை மாற்றி நீர்வரத்து வாய்க்கால் மூலம் கிராம ஏரி, குளங்களில் தேக்கி வைக்கப்படுகிறது. இதனால், மாவட்ட கடைக்கோடி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து கோடையில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க முடிகிறது.
இந்நிலையில், வட கிழக்கு பருவமழை காலம் துவங்க சில நாட்களே உள்ளதால், மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் செய்ய வேண்டும். ஆறுகள், ஏரிகள், குளங்களின் நிலைகள், கரைகளின் உறுதி தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். நீர்வரத்து வாய்க்கால்களை விரைந்து சீரமைக்க வேண்டும். இதனால், மழையின் போது கரைகள் உடைவது, விவசாய நிலங்களுக்குள் மழைநீர் புகுந்து பயிர்கள் பாதிப்பதை தடுக்க முடியும். மேலும், மழைநீர் வீணாகாமல் நீர்நிலைகளில் தேக்கி வைப்பதால் விவசாயிகள், கிராம மக்கள் பயன்பெற முடி யும். எனவே, மங்களூர், நல்லூர் ஒன்றியங்களில் வட கிழக்கு பருவமழை துவங்கும் முன் நீர்நிலைகளை சீரமைக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.