Economy, business and finance
பின்னடைவு! அழிவை நோக்கி செல்லும் கால்நடை தொழில்: 57.41 சதவீதம் பசுக்கள் எண்ணிக்கை சரிவு

குன்னூர்: நீலகிரியில் கடந்த, 44 ஆண்டுகளில் பசுக்கள் எண்ணிக்கை, 57 சதவீதத்திற்கும் கீழ் குறைந்து, பாரம்பரிய கால்நடை பராமரிப்பு தொழில் வரலாறு காணாத பின்னடைவை நோக்கி செல்கிறது.
நீலகிரி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் அதிகார பூர்வ கணக்கெடுப்பு தரவுகளின்படி, 1982ல் 1.08 லட்சமாக இருந்த பசுக்கள் மற்றும் காளைகள் எண்ணிக்கை, 2019ல் 51 ஆயிரத்து 300 என குறைந்து, 52.5 சதவீத வீழ்ச்சியை பதிவு செய்தது. இதில், பசுக்கள் மட்டும், 2024 -- 2026 காலகட்ட கள மதிப்பீட்டின்படி பசுக்களின் எண்ணிக்கை,46 ஆயிரமாக சரிந்துள்ளது.
1982 முதல் 2026 வரையிலான,44 ஆண்டுகளில், மாவட்டத்தில், 62 ஆயிரம் பசுக்கள் குறைந்து, ஒட்டுமொத்தமாக, 57.41 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதே காலகட்டத்தில் எருமைகளின் எண்ணிக்கை, 18 ஆயிரத்து 500-லிருந்து, 4 ஆயிரத்து 800 என சரிந்து, 74.05 சதவீத இழப்பை கண்டுள்ளது.
ஆடு உள்ளிட்ட அனைத்து வகைகளை உள்ளடக்கிய ஒட்டுமொத்த கால்நடைகளின் எண்ணிக்கை, 66 ஆயிரம் என, 59.25 சதவீதம் குறைந்துள்ளது.
இதில், பசுக்களில், 92 சதவீதத்திற்கும் அதிகம் ஜெர்சி கலப்பின பசுக்களாக உள்ள நிலையில், நீலகிரியின் பூர்வீக அடையாளமான தோடர் இன எருமைகளின் எண்ணிக்கையும் 2 ஆயிரம் வரை மட்டுமே எஞ்சியுள்ளது.
முன்பு உள்ளூர் பயன்பாட்டுடன், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பி வந்த ஆவின்பால், தற்போது வெளிமாவட்டங்களில் இருந்து கொள்முதல் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
மலை மாவட்டமான நீலகிரியில் மேய்ச்சல் நிலங்கள் அழிப்பு ; வனஉரிமை சட்டம் ஆகியவை இந்த சரிவுக்கு முதன்மை காரணமாக உள்ளது. குறிப்பாக, புல்வெளிகள் தேயிலை தோட்டங்களாக மாற்றப்பட்டது; பசுந்தீவன பற்றாக்குறை ; சிறுத்தை, செந்நாய்களின் தாக்குதல்கள் ஆகியவை விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் இருந்து வெளியேறியதற்கு முக்கிய காரணங்களாக உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஆல்துரை கூறுகையில், குன்னூர் தாலுகாவில், 3 கால்நடை மருத்துவமனை மட்டுமே உள்ளது. டாக்டர்கள் இல்லாததாலும் பல பசுக்கள் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழக்கிறது. படித்த இளைஞர்கள் விவசாயத்திற்கு வர விரும்பினாலும் அரசு ஊக்குவிப்பு இல்லை. மாவட்டத்தின் பால் வளத்தை பாதுகாக்கவும் பாரம்பரிய பொருளாதாரத்தை மீட்டெடுக்க, 24 மணி நேர மருத்துவ பரிசோதனைகள், இன்சூரன்ஸ் வசதிகள் அவசியம்., என்றார்.
கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில், 29 பிளாக்குகளில் 26 டாக்டர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து பிளாக்குகளிலும் மொபைல் ஆம்புலன்ஸ் வசதிக்கு ஏற்பாடுகள் நடந்து வருகிறது.' என்றனர்