Politics
பொதுமக்கள் டூவீலரில் வருவதற்கு அனுமதி இல்லை: டி.எஸ்.பி., தகவல்
முதுகுளத்துார்: பரமக்குடியில் செப்.,11ல் இம்மானுவேல் சேகரனார் குருபூஜையை முன்னிட்டு வெளியூரில் இருந்து வரும் மக்கள் டூவீலரில் வருவதற்கு அனுமதி இல்லை என்று டி.எஸ்.பி., சண்முகம் கூறினார்.
முதுகுளத்துாருக்கு உட்பட்ட கிராமத் தலைவர்களுடன் போலீசார் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது. டி.எஸ்.பி., சண்முகம் தலைமை வகித்தார். அவர் பேசியதாவது:
பரமக்குடியில் செப்.,11ல் இமானுவேல் சேகரனார் நினைவு நாளை முன்னிட்டு வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. டூவீலரில் செல்வதற்கும் அனுமதி இல்லை. சொந்த வானங்களில் வருபவர்கள் டி.எஸ்.பி., அலுவலகத்தில் உரிய அனுமதி பெற்று போலீசார் கூறும் வழித்தடங்கள் மட்டும் செல்ல வேண்டும். அனுமதி சீட்டு இல்லாத வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
வெளி மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் முறையான அனுமதி பெற்று வர வேண்டும். வாகனத்தின் கூரையில் பயணம் செய்யக்கூடாது. ஒலி பெருக்கி கட்டக்கூடாது. வெடி வெடிப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் ஜாதி உணர்வுகளைத் துாண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களை கட்டக்கூடாது. கிராமத்திற்கு பஸ் வசதி வேண்டுமென்றால் போலீசிடம் முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார். உடன் டி.எஸ்.பி., சகாய அன்பரசு, இன்ஸ்பெக்டர்கள் முகமது எர்ஷாத், ராஜேந்திரன், ஜெகதீசன், துரைப்பாண்டியன், போலீசார் மற்றும் கிராமத் தலைவர்கள் பலர் இருந்தனர்.