Lifestyle and human interest
அச்சம் நோய் தொற்றுகளுடன் சுற்றித் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள், விலங்குகளுக்கு நோய் பரவும் அபாயம்
ஆண்டிபட்டி, செப்.13 தேனி மாவட்டத்தில் நோய்த்தொற்றுடன் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொது மக்களுக்கும்,
தேனி மாவட்டத்தில் நோய்த்தொற்றுடன் சுற்றித்திரியும் தெரு நாய்களால் பொது மக்களுக்கும், விலங்குகளுக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்துவதில் ஒருங்கிணைப்பு நடவடிக்கை இல்லாததால் நாளுக்கு நாள் பெருகும் தெரு நாய்களால் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது.
தேனி மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் உள்ளன. கடந்த காலங்களில் தொந்தரவு தந்த தெரு நாய்களை உள்ளாட்சி நிர்வாகத்தினர் பிடித்து சென்று அப்புறப்படுத்தினர். விலங்குகள் நல வாரியம் நடவடிக்கையால் தெரு நாய்களை கொல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து உள்ளாட்சி நிர்வாகங்கள் நாய்களுக்கு கருத்தடை செய்து அதன் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இருப்பினும் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கும் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியவில்லை. சமீப காலமாக நோய் தொற்றால் பாதித்த தெரு நாய்கள் எண்ணிக்கை அனைத்து இடங்களிலும் அதிகரித்துள்ளது. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் திடீரென்று குறுக்காக செல்லும் தெரு நாய்களால் அடிக்கடி விபத்து, உயிர்ப்பலி ஏற்படுகிறது. கூட்டமாக சுற்றித்திரியும் தெரு நாய்களால் குழந்தைகள், முதியவர்கள் அதிகம் பாதிப்படைகின்றனர். குழந்தைகளை தெரு நாய்கள் துரத்தும் சம்பவங்கள் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்துகிறது. கூட்டமாகச் செல்லும் தெரு நாய்கள் வீடுகளில் பராமரிக்கப்படும் ஆடுகள், கோழிகளை வேட்டையாடி நஷ்டம் ஏற்படுத்துகிறது.
136 தெருநாய்கள் அடக்கம் தெரு நாய்களால் ஏற்படும் பாதிப்பு குறித்து சமூக ஆர்வலர் ரஞ்சித்குமார் கூறியதாவது:
நாய்கள் மூலம் மனிதர்களுக்கு பரவும் நாடா புழுக்களால் நோய் தொற்று ஏற்படுவதாக சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ளது. பிராய்லர் கோழிக்கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல் கண்ட இடங்களில் கொட்டுகின்றனர். இவற்றை உண்ணும் நாய்களுக்கு முடி உதிர்ந்து நோய் தொற்று ஏற்படுகிறது. இந்த நோய் தொற்று பொதுமக்களுக்கும் மற்ற விலங்கினங்களுக்கும் பரவும் அபாயம் உள்ளது. அனைத்து தெரு நாய்களுக்கும் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமில்லை. இறந்த தெரு நாய்கள் பல இடங்களில் அடக்கம் செய்யப்படாமல் அழுகி துர்நாற்றம் ஏற்படுவதால் அப்பகுதியில் நோய்க்கிருமிகள் அதிகமாகும். இதனை கருத்தில் கொண்டு இறந்து கிடக்கும் தெரு நாய்கள் குறித்து தெரிய வந்தால் உடனே சென்று அடக்கம் செய்து விடுவேன். அப்பகுதியில் இருந்து காற்று மூலமும் கிருமிகள் பரவும் வாய்ப்பு உள்ளது. இதுவரை 136 இறந்து கிடந்த தெரு நாய்களை புதைத்து அடக்கம் செய்துள்ளேன். உள்ளாட்சி நிர்வாகம், கால்நடைத்துறை, சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பு நடவடிக்கை மூலமே தெரு நாய்கள் எண்ணிக்கை மற்றும் தெரு நாய்களால் ஏற்படும் நோய் தொற்றை கட்டுப்படுத்த முடியும் என்றார்.