குப்பை கிடங்கு மண் சரிவுக்கு காரணமான கழிவுநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி
சென்னை: பெருங்குடி குப்பை கிடங்கில் மண் கழிவுகள் சரிய காரணமான கழிவுநீர் குழாய் உடைப்பை சீரமைக்கும் பணியில், மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரிய நிர்வாகங்கள் ஈடுபட்டுள்ளன. தவிர, நீர்வழி தரைப்பாலங்களில் அடைத்துள்ள கழிவுகளையும் அகற்றி வருகின்றன.
பல்லாவரம் – துரைப்பாக்கம் சாலையை ஒட்டி, பெருங்குடி குப்பை கிடங்கு 220 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. மாநகராட்சியின் ஏழு மண்டலங்களில், தினமும் சேகரிக்கப்படும் 2,700 டன் குப்பை கழிவுகள், இங்கு கொட்டப்பட்டு வருகின்றன.
கடந்த 40 ஆண்டுகளாக குப்பை கொட்டு வருவதால், 35 லட்சம் கன மீட்டர் அளவில் குப்பை தேங்கி உள்ளது.
இந்த குப்பையால், சுற்று வட்டார பகுதியில் நிலத்தடி நீர் மாசு, தீப்பிடித்து நச்சுப்புகை பரவுவதால் கண் எரிச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல் உபாதைகள், மக்களுக்கு ஏற்படுகின்றன.
இதற்கு தீர்வு காண, ‘பயோமைனிங்’ எனும் குப்பையை தரம் பிரித்து அகற்றும் பணி, 2022ல் தொடங்கியது. பல கட்டங்களாக 400 கோடி ரூபாயில் குப்பையை தரம்பிரித்து, மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தரம் பிரிக்கப்பட்ட குப்பை கழிவுகளை ஒரு பக்கமாக நகர்த்தி, பொக்லைன் இயந்திரங்களால் அழுத்தி, மலை போல குவிக்கப்பட்டு வருகிறது. குப்பை காற்றில் சிதறாமல் இருக்கவும், இடப்பற்றாக்குறையை தீர்க்கவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
தொடர்ந்து அழுத்தி வருவதால், 40 ஆண்டுகளாக கொட்டப்பட்ட கழிவுகள் மக்கி மண்ணாகி, ரேடியல் சாலையில் சரிந்து வருகின்றன.
அழுத்தத்தால் வெளியேறும் மண் கழிவுகள், ரேடியல் சாலையில் உள்ள மூன்று நீர்வழி தரைப்பாலங்களை அடைத்துள்ளன. இதனால், தரைப்பாலத்தில் நீரோட்டம் தடைபட்டுள்ளது.
குறிப்பாக 1,000 எம்.எம்., குழாய் சேதமடைந்து கழிவுநீர் வெளியேறுவதால் மண் சரிவு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ரேடியல் சாலை மூட வேண்டிய நிலையும் ஏற்பட்டது. இது குறித்து, நம் நாளிதழில் படத்துடன் விரிவான செய்தி வெளியானது.
இதையடுத்து, மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் இணைந்து, மண் சரிவுக்கு காரணமான கழிவுநீர் குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன. அதேபோல், மூன்று நீர்வழி தரைப்பாலங்களில் அடைத்துள்ள கழிவுகளும் அகற்றப்பட்டு வருகின்றன.
வடகிழக்கு பருவமழையின் போது மண் சரிவு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சாலையை ஒட்டி தடுப்பு சுவர் அமைக்கவும், மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.