ஏரிகளை ஆக்கிரமித்தால் கிரிமினல் வழக்கு பாயும் அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே எச்சரிக்கை

பெங்களூரு: ''கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஏரிகளை ஆக்கிரமிப்போர் மீது, கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படும். தயவு தாட்சண்யமின்றி ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்,'' என, கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே எச்சரித்தார்.
கர்நாடகா, நாட்டிலேயே இரண்டாவது மிக அதிகமான வறண்ட நிலம் உள்ள மாநிலமாகும். கிராமப்புற மக்களுக்கு குடிநீர் வழங்குவது, பெரும் சவாலான விஷயமாகும்.
மாநிலத்தின் கிராம பஞ்சாயத்து கட்டுப்பாட்டில், 32,504 ஏரிகள் உள்ளன. இவற்றில் 11,498 ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 6,670 ஏரிகளின் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. மேலும், 4,828 ஏரிகளின், 11,671 ஏக்கர் ஆக்கிரமிப்பை அகற்றினோம்.
ஆக்கிரமிப்பை அகற்ற, நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். வரும் நாட்களில் ஏரிகளை யார் ஆக்கிரமித்தாலும், கிரிமினல் வழக்கு பதிவாகும்; ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
மத்திய ஜல்சக்தி அமைச்சகம் சார்பில், குடிநீர் தொடர்பாக டில்லியில் நடந்த, இரண்டு நாட்கள் மாநாட்டில், நானும் பங்கேற்றேன். பிரதமரின் முன்னிலையில் தண்ணீர் பாதுகாப்புக்கு கர்நாடக அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விவரித்தேன்,
நிலத்தடி நீர் அதிகமாக பயன்படுத்தப்படுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைகிறது. வரும் நாட்களில் ஏரிகள், குளங்கள், ஆறுகள் போன்ற நீர் நிலைகளை பாதுகாக்காவிட்டால், குடிநீர் பிரச்னை ஏற்படும். பூமியை சுற்றிலும் நீர் உள்ளது.
ஆனால், குடிநீருக்கு 3 சதவீதம் நீர் மட்டுமே உள்ளது. எனவே , நீர் வளங்களை பாதுகாப்பது, நமது கடமையாகும். மாநாட்டின் போது, பிரதமர் முன்னிலையில், ஏரிகள், ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் கலக்காமல், ஆக்கிரமிக்கப்படாமல் தடுக்க, தேசிய திட்டம் வகுக்கும்படி வலியுறுத்தினேன்.
கர்நாடகாவின், 26,589 கிராமங்களில், 4.45 கோடி மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவது, அரசுக்கு சவாலாக உள்ளது. அடுத்த, 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் மக்கள் தொகையை, மனதில் கொண்டு மாநில அரசு பல திட்டங்களை செயல்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.