அடுத்தாண்டு பட்டினப்பாகம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட மாட்டாது - தமிழ்நாடு அரசு

அடுத்தாண்டு முதல் பட்டினப்பாக்கம், நீலாங்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்படாது என தமிழக அரசு பசுமைத் தீர்ப்பாயத்தில் உறுதியளித்துள்ளது.
சென்னையில் பட்டினப்பாக்கம், நீலாங்கரை கடற்கரைகளில் அடுத்தாண்டு முதல் விநாயகர் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என தமிழக அரசு, தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் உத்தரவாதம் அளித்துள்ளது.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, நீர் நிலைகளில் சிலைகளை கரைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரிய வழக்கை விசாரித்த தென் மண்டல பசுமை தீர்ப்பாயம்,சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் சிலைகளை கரைக்க அனுமதிக்க இயலாது என்றும், இந்த இரண்டு இடங்களிலும் கரைக்கப்படும் சிலைகளை மற்ற 4 இடங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து செப்டம்பர் 16-ஆம் தேதி தெரிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்தியநாராயணா தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சென்னை மாநகராட்சி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையி ல், காவல்துறை, உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள், கடலோர மேலாண்மைக் குழு ஆகியோருடன் செப்டம்பர் 13-ஆம் தேதி ஆலோசனை மேற்கொண்டதாகவும், நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் கரைக்கப்படவுள்ள சிலைகளை, மற்ற 4 பகுதிகளுக்கு அனுப்புவதில், சட்டம் ஒழுங்கு, போக்குவரத்து நெரிசல், உள்ளிட்ட பல்வேறு நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், அந்த அறிக்கையில், பாலவாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 450 சிலைகளை கோவளத்துக்கும், பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்கவுள்ள 250 சிலைகளை எண்ணூருக்கும் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அடுத்தாண்டு முதல் நீலாங்கரை, பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதிகளில் சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்று அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.
அப்போது மனுதாரர் தரப்பில், பட்டினப்பாக்கம், நீலாங்கரை மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த கடற்கரைகளிலும் அடுத்தாண்டு முதல் சிலைகள் கரைக்க அனுமதிக்கக்கூடாது என்றும் மாறாக தற்காலிக குட்டைகளை உருவாக்கி அதில் சிலைகளை கரைப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, அடுத்தாண்டு முதல் இயற்கை நீர்நிலைகளில், சிலைகள் கரைக்கப்படமாட்டாது என்றும், இதுசம்பந்தமாக உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் மற்றும் பசுமைத் தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவுகள், விதிகள் பின்பற்றப்படும் என உறுதியளித்து தமிழக அரசு பிரமாணப்பத்திரத்தை நாளை தாக்கல் செய்ய உத்தரவிட்ட தீர்ப்பாயம், விசாரணையை தள்ளிவைத்துள்ளது.
மேலும்,சிலைகளுக்கு ஏற்ப கரைப்பதற்கான கட்டணத்தை வசூலிக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில், அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது. முன்னதாக இந்த வழக்கில் இந்து முன்னணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கார்த்திகேயன், தமிழ்நாட்டில் எந்த இடத்திலும், பிளாஸ்டர் ஆஃப் பாரிஸில் செய்யப்பட்ட சிலைகள் வைக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.

