ஜாமீன் கையெழுத்து போட்டுவிட்டு சென்றவர் வெட்டிக் கொ@லை- செங்கல்பட்டு பைபாஸில் அதிர்ச்சி

செங்கல்பட்டு மாவட்டத்தில் நீதிமன்றத்திற்குச் சென்று தமக்கு எதிரான ஒரு கொலை வழக்கிற்காகக் கையெழுத்திட்டுத் திரும்பிய வாலிபர் ஒருவர், பின்தொடர்ந்து வந்த பயங்கரக் கும்பலால் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வீரா என்ற வீரமூர்த்தி கிருஷ்ணன் (26). இவர் உள்ளூரில் துரித உணவு கடை நடத்தி வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில் ஆகாஷ் என்ற இளைஞர் அரிவாளால் வெட்டிக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட வழக்கில் வீரமூர்த்தி முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருந்தார்.
இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த அவர், நீதிமன்ற நிபந்தனைப்படி செங்கல்பட்டு நீதிமன்றத்திற்குச் சென்று முறையாகத் தனது கையெழுத்தைப் பதிவு செய்துள்ளார். நீதிமன்றப் பணிகளை முடித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் மீண்டும் வீட்டிற்குத் திரும்புவதற்காக வீரமூர்த்தி புறப்பட்டார்.
செங்கல்பட்டு பைபாஸ் சாலையில் உள்ள பழவேலி பகுதிக்கு அருகே வந்தபோது, தனது வண்டியில் பெட்ரோல் போடுவதற்காக ஒரு பங்கில் வண்டியை நிறுத்தியுள்ளார். அந்தச் சமயம், அவரைத் தொடர்ந்து இரண்டு இருசக்கர வாகனங்களில் பின் தொடர்ந்து வந்த 6 பேர் கொண்ட பயங்கரக் கும்பல் திடீரென வீரமூர்த்தியைச் சுற்றிலும் வளைத்துத் தாக்கத் தொடங்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அக்கும்பல் தங்களின் கைகளில் வைத்திருந்த பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்ட முயன்றது. அவர்களிடம் இருந்து தப்பிப்பதற்காக வீரமூர்த்தி அலறியடித்தபடி நடுரோட்டில் ஓட ஓட முயன்றார்.
இருப்பினும், விடாமல் துரத்திய அந்த 6 பேர் கொண்ட கும்பல், அவரைச் சாலையில் தள்ளி துடிதுடிக்க வெட்டிக் கொலை செய்துவிட்டு, தங்களின் இருசக்கர வாகனங்களிலேயே மின்னல் வேகத்தில் தப்பி ஓடிவிட்டது. பட்டப்பகலில் நடந்த இந்த அதிர்ச்சிப் படுகொலை குறித்துத் தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு மாவட்டக் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரத்த வெள்ளத்தில் கிடந்த வீரமூர்த்தியின் சடலத்தைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்த ஆகாஷ் கொலைக்குப் பழிக்குப்பழியாகவே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளதை முதற்கட்ட விசாரணையில் போலீசார் உறுதி செய்துள்ளனர். தப்பியோடிய அந்தக் கொடூரக் கும்பலை வளைத்துப் பிடிப்பதற்காக சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)