Crime, law and justice
மும்பை விமான நிலையத்தில் பயணிகள் பேக்கில் தொடரும் பணம், நகை திருட்டு! குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை
The Crime Branch police have formed a special team to arrest individuals who have been repeatedly stealing cash and jewelry from passengers' bags at Mumbai Airport.

மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து தொடர்ந்து பணம் மற்றும் நகைகளை திருடும் நபர்களை கைது செய்ய குற்றப்பிரிவு போலீஸார் தனிப்படையை அமைத்துள்ளனர்.
மும்பை விமான நிலையத்தில் பயணிகளின் பேக்கில் இருந்து அடிக்கடி திருட்டு நடக்கிறது. சமீபத்தில் மும்பையில் இருந்து நியூயார்க் சென்ற மாணவர் ஒருவரின் பேக்கில் இருந்து 5 ஆயிரம் அமெரிக்க டாலர் திருட்டு போனது. கடந்த ஆண்டு ஜனவரி முதல் நடப்பு ஆண்டு செப்டம்பர் 5ம் தேதி வரை மும்பை விமான நிலையத்தில் 27 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளன.
இதில் 22 வழக்கு மும்பை சஹார் போலீஸ் நிலையத்திலும், 5 விமான நிலைய போலீஸ் நிலையத்திலும் விசாரணையில் உள்ளன. ஆனாலும் இதில் இதுவரை துப்பு துலங்கவில்லை.
எனவே இவ்வழக்கு விசாரணையை குற்றப்பிரிவு போலீஸார் தனது கட்டுப்பாட்டில் எடுத்து விசாரிக்க தொடங்கி இருக்கின்றனர். இதற்காக தனிப்படை ஒன்றை அமைத்துள்ளனர். சமீபத்திய வழக்கில், தாதரை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஆலோசகர் கடந்த 5ம் தேதியன்று சஹார் போலீஸாரை அனுகி நியூயார்க்கில் இறங்கும் போது அவரது மகன் பேக்கில் இருந்த பணம் காணாமல் போனதாக புகார் செய்துள்ளார்.
மகன் பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற சென்று கொண்டிருந்தார். அந்தப் பணம் என் மகனின் ஓராண்டு காலச் செலவுகளுக்காக வைக்கப்பட்டிருந்தது.
மும்பை சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பாதுகாப்புச் சோதனை மையத்தில், இரவு சுமார் 9 மணியளவில் அவன் தனது கைப்பையை ஒரு தட்டில் வைத்துச் சோதனையிட்ட பிறகு அதைத் திரும்பப் பெற்றுக்கொண்டான். ஏர் இந்தியா விமானம் AI119 இரவு 10.20 மணிக்குக் கிளம்பியது. நியூயார்க் விமான நிலையத்தில் குளிர்பானம் ஒன்றை வாங்க முயன்றபோது, இரவு பணம் காணாமல் போயிருப்பதை அவன் கவனித்தான். பயணம் முழுவதும் அந்த கைப்பை தன்னிடமே இருந்ததாக மகன் தெரிவித்துள்ளார்.
நியூயார்க் விமான நிலையத்தில் ஆய்வு செய்யப்பட்ட சிசிடிவி (CCTV) காட்சிகளில், அந்தப் பையில் எந்தவிதமான முறைகேடும் நடந்ததற்கான அறிகுறி எதுவும் தெரியவில்லை என்று தெரிவித்ததாக அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மீது போலீஸார் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்துள்ளனர். இது குறித்து சஹார் போலீஸார் கூறுகையில், விமான நிலையத்திலிருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்றுள்ளோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். சந்தேகத்திற்குரியவர்கள் பட்டியலில் உள்ள ஏர் இந்தியா ஊழியர்கள், சரக்கு கையாளுபவர்கள் மற்றும் சந்தேகிக்கப்படும் பிற நபர்களை விசாரணைக்காக அழைக்கவுள்ளோம்," என்று தெரிவித்தார்.
மும்பை விமான நிலையத்தில் கடந்த 10 நாட்களில் நிகழ்ந்த நான்காவது திருட்டுச் சம்பவம் இதுவென சஹார் காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பல்வேறு அமைப்புகளின் பல அடுக்கு பாதுகாப்பு மற்றும் சோதனைகள் இருந்தபோதிலும், விமான நிலையத்திலிருந்து பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் எவ்வாறு வெளியே செல்கிறது என்பது குறித்தும் சிறப்புப் படை ஆய்வு செய்து வருவதாக மூத்த குற்றப்பிரிவு அதிகாரி ஒருவர் கூறினார். பயணப் பைகளுடன் தொடர்பில் இருந்திருக்கக்கூடிய பயணிகள், விமான நிறுவன ஊழியர்கள், சுமை தூக்குவோர் மற்றும் பிற பணியாளர்களின் நடமாட்டத்தையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
