ஆட்டுக்கல், அம்மி தயாரிப்பில் மாதம் ரூ.15 லட்சம் வர்த்தகம்! :சுற்றுலா செல்லும் இடத்தை யாராலும் கணிக்கவே முடியாது!

'கிரானைட்' கற்களில் ஆட்டுக்கல், அம்மி தயாரித்து, 'ஸ்டோன் அண்டு சோல்' என்ற நிறுவனம் வாயிலாக விற்பனை செய்யும், ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த, 29 வயதாகும் சவுந்தர்ய லட்சுமி:
என் அப்பா, பல ஆண்டுகளாக, 'கிரானைட்' எனப்படும், 'பாலீஷ்' செய்யப்பட்ட கருங்கல் தொழில் செய்து வந்தார். கொரோனா ஊரடங்கில் நஷ்டம் அதிகமாகி, வாழ்க்கையையே புரட்டி போட்டு விட்டது. இடைப்பட்ட காலத்தில் எனக்கு திருமணமாகி, அமெரிக்கா சென்று விட்டேன்.
அங்கு வாழும் இந்தியர்களிடம், நம் ஊர் அம்மி, ஆட்டுக்கல் என பாரம்பரிய பொருட்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டேன். ஆனால், அதை இந்த காலத்திற்கு ஏற்ற மாதிரி கிரானைட், மார்பிள் என, அழகான வடிவமைப்புகளில் செய்து பயன்படுத்தி வந்தனர்.
இந்தியா வந்ததும், 20 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் களத்தில் இறங்கினேன். குவாரிகளில் உடைந்து, ஒதுக்கி வைத்திருந்த கிரானைட் கற்களை வாங்கி, அம்மி கொத்துவோர், ஆட்டுக்கல் செய்வோரை கண்டுபிடித்து, 10 பொருட்கள் மட்டும் செய்து வாங்கினேன்.
அந்த நேரத்தில், என் தோழி ஒரு கண்காட்சியில் தற்காலிக கடை அமைத்திருந்தார். நம் பொருட்களை அங்கு வைத்து பார்ப்போம் என்று அரை மனதுடன் எடுத்து சென்றேன். இரண்டே நாட்களில் அனைத்து பொருட்களும் விற்றதுடன், அடுத்தடுத்த, 'ஆர்டர்'களும் வந்தன.
அதன்பின், 1 லட்சம் ரூபாய்க்கு பெரிய ஆர்டர் ஒன்று கிடைத்தது. ஒரு வாரத்திற்குள் பொருட்களை அனுப்ப வேண்டும். எங்கள் நிறுவனத்தில் பணியாற்றும் ஒருவர், தன்னுடன் நான்கு பேரை அழைத்து வந்தார். அவர்கள் உதவியுடன், நேரம் காலம் பார்க்காமல், ஆர்டரை முடித்து, 'பார்சல்' செய்து லாரியில் அனுப்பினேன்.
ஆனால், மறுநாளே வாடிக்கையாளரிடம் இருந்து போன். 'நீங்கள் அனுப்பிய பொருட்கள் அனைத்தும் உடைந்து வந்திருக்கின்றன' என கூறி, அதற்கான காணொளியையும் அனுப்பி இருந்தார். அப்போது தான், பாதுகாப்பாக பார்சல் செய்யாமல், வைக்கோல் மட்டும் வைத்து அனுப்பியது புரிந்தது.
கடன் வாங்கி, அந்த நஷ்டத்தை சமாளித்தேன். வீட்டின் எதிர்ப்பையும் மீறி, கையில் இருந்த மிக குறைவான முதலீட்டில் மீண்டும் தொழில் ஆரம்பித்தேன். எங்கெல்லாம் தவறுகள் செய்திருந்தேனோ, அவற்றை சரி செய்தேன்; ஆர்டர்கள் வர ஆரம்பித்தன. கடனில் இருந்து மீண்டு வந்தேன். கிடைத்த லாபத்தை தொழிலிலேயே முதலீடு செய்தேன்.
இப்போது என்னிடம், 200க்கும் மேற்பட்ட பொருட்கள் உள்ளன; 15 பேர் பணிபுரிகின்றனர். அமெரிக்கா, சிங்கப்பூர், மலேஷியா நாடுகளுக்கும் எங்கள் தயாரிப்புகளை அனுப்பி வருகிறேன். மாதம், 15 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடக்கிறது.
தொடர்புக்கு: 93603 23141.
'சுற்றுலா செல்லும் இடத்தை யாராலும் கணிக்கவே முடியாது!'
அறிமுகம் இல்லாதவர்களை குழுவாக இணைத்து, சுற்றுலா அழைத்து செல்லும், 'ஸ்ட்ரேஞ்சர்ஸ் உலா' நிறுவனத்தைச் சேர்ந்த, 25 வயதான தினிஷா மற்றும் 29 வயதான ரேவதி.
* தினிஷா: எங்கள் குழுவில் இருப்பவர்களில், 10க்கும் மேற்பட்டோர் பல ஆண்டுகளுக்கும் மேலாக சுற்றுலா பயணியர் தான். எங்கள் அனைவரையும் இணைக்கும் விஷயம், பயணம். நான்கு ஆண்டுகளாக நாங்கள் சுற்றுலா செல்லும்போது, எங்கள் நண்பர்களின் நண்பர்களையும் உடன் அழைத்து செல்வோம்.
ஆனால், எங்கு செல்கிறோம் என்று கூற மாட்டோம்; எந்த இடத்துக்கு செல்கிறோம் என்று தெரியாமல், அந்த இடத்தை நேரில் பார்க்கும்போது, அவர்கள் கண்ணில் தெரியும் வியப்பையும், மகிழ்ச்சியையும் பார்ப்பது எங்களுக்கு பிடித்திருந்தது. அதன்பின் தான், இதையே ஒரு நிறுவனமாக துவக்கினோம்.
நாங்கள் அழைத்து செல்லும் அனைத்து இடங்களுமே ரகசிய சுற்றுலாக்கள் தான். எங்கு செல்கிறோம், என்னென்ன விஷயங்கள் சுற்றுலாவில் இருக்கும் என்று அவர்களிடம் சொல்ல மாட்டோம். அதனால், இயல்பாகவே எதிர்பார்ப்பும், ஆர்வமும் உருவாகி விடும்.
இணையதளம் வாயிலாகவோ அல்லது பயணம் செய்யும் வழிகள் மூலமாகவோ கண்டுபிடிக்க முயற்சி செய்தாலும், நாங்கள் அழைத்து செல்லும் இடத்தை அவர்களால் கணிக்க முடியாது; அந்த அளவுக்கு கஷ்டப்பட்டு இடங்களை தேர்வு செய்கிறோம்.
* ரேவதி: எங்களுடன் வருவோருக்கு, 'நாம் பணம் கட்டியிருக்கிறோம். இவர்கள் நம்மை அழைத்து செல்வரா, இல்லையா? ரகசிய இடம் என்று சொல்லி, ஏற்கனவே சென்ற இடத்திற்கே அழைத்து செல்வரோ' என்ற சந்தேகம் இருக்கும். பயணிப்போருக்குள் நட்பை உருவாக்குவதற்கு, 'ஆக்டிவிட்டி கேம்ஸ்' எனும் சில செயல்பாட்டு விளையாட்டுகளை விளையாடுவோம்.
அந்த சமயத்தில், அனைவரும் சேர்ந்து மகிழ்ச்சியாக செல்வோம் என்ற மனநிலைக்கு அவர்கள் வந்து விடுவர். அதன்பின், எங்கள் திட்டத்தில் இருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லும்போது, அவர்கள் அடையும் ஆச்சரியத்துக்கு அளவே கிடையாது. தமிழகம், கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள தனித்துவமான, புதிய அனுபவத்தை கொடுக்கும் இடங்களுக்கு அழைத்து செல்கிறோம்.
ஒவ்வொரு பயணத்திலும், 40 பேர் வரை அழைத்து செல்கிறோம். எங்களுடன் வரும்போது மது அருந்த அனுமதி கிடையாது. தம்பதியாக வந்தாலும் ஆண், பெண் தனியாகத் தான் தங்க வேண்டும். ஒவ்வொரு பயணத்திலும், எங்கள் குழுவைச் சேர்ந்த மூன்று பெண் நிர்வாகிகள் இருப்பர்.
அதேபோல் ரகசிய நிர்வாகி ஒருவர், எங்கள் குழுவில் பயணி போலவே உடன் இருப்பார். பெண்களுக்கு ஏதேனும் பிரச்னை வருகிறதா, பயணியர் மது அருந்துகின்றனரா என்பதை கண்காணிக்கவே அவர் இருப்பார்.