Lifestyle and human interest
தெருநாய் தொல்லை: பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்த விநோதம்.. வைரல் வீடியோ!

நாசிக்கில் தெருநாய் தொல்லைக்கு நடவடிக்கை எடுக்காததால், பஞ்சாயத்து அலுவலகத்தில் நாய்களை விட்டு யுவசேனா போராட்டம் நடத்தியது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் தெருநாய் தொல்லை குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, பஞ்சாயத்து அலுவலகத்தில் நாய்களை விட்டு போராட்டம் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் நிப்பாட் நகர பஞ்சாயத்து பகுதியில் நாளுக்கு நாள் தெரு நாய் தொல்லை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் குழந்தைகள், பெண்கள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், இருசக்கர வாகனங்களில் செல்வோரையும், தெரு நாய்கள் துரத்தி வருவதாகவும், சமீபத்தில் பலர் இதனால் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, சிவசேனா கட்சியின் இளைஞர் பிரிவான யுவசேனா-வின் மாவட்டத் தலைவர் விக்ரம் ராதாவே தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது பஞ்சாயத்து அலுவலக அதிகாரி திரஜ் பம்ரே வின் அலுவலகத்திற்கு வந்த போராட்டக்காரர்கள், பையில் கொண்டு வந்த நாய்க்குட்டிகளை அங்கு விட்டனர்.
மேலும், ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையையும் அதிகாரியின் மேஜை மீது வைத்தனர். பின்னர் அலுவலக ஊழியர்கள் வந்து போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
