Environment
நேபாள பெருவெள்ளத்தில் சிக்கிய 2 பேர் 11 நாட்களுக்கு பின் மீட்பு

காத்மாண்டு: நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கிய ஒரு பெண்ணும், சுரங்கத்தில் இருந்து ஒரு சீன பணியாளரும், 11 நாட்களுக்குப் பின் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த ஆக., 26ம் தேதி, பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட பெருவெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து, 11வது நாளாக நேற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்தது. நேற்று முன்தினம், சுரங்கத்தில் சிக்கியிருந்த இரண்டு பேர் உயிருடன் மீட்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், நேற்று நுவாகோட் மாவட்டத்தில் உள்ள பெத்ராவதி பகுதியில், பலத்த சேதமடைந்த நான்கு மாடி வீடு ஒன்றின் கூரை பகுதியில் பெண் ஒருவர் சிக்கியிருப்பதை மீட்புப் படையினர் கண்டறிந்தனர். கீழ் தளங்கள் முழுதும் இடிபாடுகளுக்குள் புதைந்திருந்த நிலையில், சேற்றில் சிக்கி, பலவீனமான இருந்த அப்பெண் மீட்கப்பட்டார். அவர் பெயர் சண்டிகா ஸ்ரேஸ்தா, 60, என தெரிய வந்தது. மீட்கப்பட்ட அவர் உடனடியாக ராணுவ ஹெலிகாப்டர் வாயிலாக சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
இதேபோன்று, ரசுவா மாவட்டத்தில், திரிசூலி – 1 நீர் மின் திட்டப் பகுதியில் உள்ள சுரங்கத்தில் சிக்கியிருந்த லுாகைடாவோ என்ற, நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
சுரங்கத்தில், 738 அடி ஆழத்தில் இருந்து அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
சேதமடைந்த நீர் மின் திட்ட சுரங்க பகுதிகளில் இன்னும் நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என்ற அஞ்சப்படும் நிலையில், இந்த மீட்பு முயற்சிகள், மீட்பு குழுவினருக்கு புதிய நம்பிக்கையை அளித்துள்ளது.