வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் மீண்டும் செயல்பாட்டுக்கு வருகிறதா? சிப்காட் இணையதள தகவலால் குழப்பம்

காஞ்சிபுரம்: வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் கைவிடப்பட்டதாக, விவசாயிகளிடம் அதிகாரிகள் தெரிவித்த நிலையில், சிப்காட் இணையதளத்தில் அடுத் து வரும் சிப்காட் திட்டம் பட்டியலில், வல்லப்பாக்கம் இடம் பெற்றிருப்பதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அருகே வல்லப்பாக்கம் கிராமத்தில், 120 ஏக்கர் பரப்பளவில், புதிதாக சிப்காட் தொழிற்பூங்கா அமைக்க 2021ல் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதை தொடர்ந்து, அரசாணை பிறப்பிக்கப்பட்டு, விவசாயிகளுடன் பேச்சு நடத்தி, நில எடுப்புக்கான அதிகாரிகள் நியமனம் செய்வது என, பல்வேறு பணிகளை சிப்காட் நிறுவனம் மேற்கொண்டு வந்தது.
மேலும், நில உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டு, இழப்பீடு வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால், அவர்களின் நிலங்களை விற்கவும், அடமானம் வைக்கவும் தடை விதிக்கப்பட்டு, பத்தி ரப்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
ஆனால், வல்லப்பாக்கம் கிராமத்தில் சிப்காட் அமைக்கும் பணி, அடுத்த கட்டத்திற்கு நகராமல் இழுபறியாகவே சென்றது. இதனால், அதிருப்தியடைந்த நில உரிமையாளர்கள் பலரும், கலெக்டரிடமும், சிப்காட் அதிகாரிகளிடமும், முதல்வர் தனிப்பிரிவிலும் முறையிட்டு வந்தனர்.
மூன்று ஆண்டுகளுக்கு முன், சிப்காட் பணிகளை அதிகாரிகள் நிறுத்தினர். சிப்காட் நிர்வாக குழு கூட்டத்தில், வல்லப்பாக்கத்தில் சிப்காட் கைவிடும் முடிவை எடுத்தனர். சிப்காட் அமைக்கும் முடிவை கைவிடும் நிலையில், அதற்கான அரசாணையை பிறப்பிக்காததால், நில உரிமையாளர்கள் இன்று வரை அவதிப்படுகின்றனர்.
ஆனால், அரசாணை பிறப்பிக்காமல் தொழில் துறை இழுத்தடிக்கிறது. இதனால், மூன்று ஆண்டுகளாக தடையில்லாத சான்று வழங்காததால், நிலங்களை விற்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.
வல்லப்பாக்கம் சிப்காட் வராது எனவும், அதற்கான அரசாணை விரைவில் வரும் எனவும், சிப்காட் அதிகாரிகள் தெரிவித்து வந்த நிலையில், சிப்காட் இணையதளத்தில், அடுத்து வரும் சிப்காட் திட்டங்கள் பட்டியலில், வல்லப்பாக்கம் இடம் பெற்றிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
வல்லப்பாக்கம் சிப்காட் கைவிடப்பட்டதால், தங்கள் நிலங்களை விவசாயிகள் விற்க முயற்சிக்கும் நிலையில், வல்லப்பாக்கம் சிப்காட் செயல்பாட்டுக்கு வரும் என்பதாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டது, விவசாயிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, சிப்காட் திட்ட நில எடுப்பு மாவட்ட வருவாய் அலுவலர் அருள் கூறுகையில், “வல்லப்பாக்கம் சிப்காட் திட்டம் கைவிடுவதற்கான விபரங்கள், ஏற்கனவே அரசுக்கு சென்றுவிட்டன. அரசாணைக்கு காத்திருக்கிறோம். விரைவி ல் அரசாணை வரும்,” என்றார்.