தார் விலை உயர்வால் சாலைப்பணியில் தொய்வு: நிறைவு செய்த பணிக்கும் பணம் கொடுக்கவில்லை, ஒப்பந்ததாரர்கள் வேதனை

சிவகங்கை:போரால் தார் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டத்தில் சாலை பணிகள் தொய்வு அடைந்திருப்பதாகவும், அதை பொருட்படுத்தாமல் சாலை அமைக்கும் பணியை செய்தாலும் பார்த்த வேலைக்கு தொகையை ஒதுக்கீடு செய்ய மாவட்ட நிர்வாகம் தாமதப்படுத்துவதாகவும் ஒப்பந்ததாரரர்கள் தெரிவிக்கின்றனர்.
அமெரிக்கா இஸ்ரேல் ஈரான் நாடுகளுக்கிடையே போர் நடப்பதால் உலக அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. அதன் கழிவிலிருந்து கிடைக்கும் சாலை அமைக்க பயன்படுத்தப்படும் தாரின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளதால் ஒப்பந்தம் எடுத்த வேலைகள் அனைத்திலும் நஷ்டம் ஏற்படுகிறது.
கச்சா எண்ணெய்யைச் சுத்திகரிக்கும் போது கிடைக்கும் தாரின் விலை டன்னுக்கு ரூ.40 ஆயிரத்தில் இருந்து 90 ஆயிரம் வரை அதாவது 90 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. இதனால் சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்கள் நெருக்கடியைச் சந்தித்து வரும்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்கவும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காகவும் நஷ்டத்தை பொருட்படுத்தாமல் பார்த்த வேலைக்கும் 3 மாதங்களை கடந்து பார்த்த வேலைக்கான பில் தொகையை ஒதுக்காததால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஒப்பந்ததாரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஒப்பந்ததாரர் கந்தசாமி கூறுகையில், உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் மற்றும் உலக பொருளாதார மாற்றம் காரணமாக அனைத்து கட்டுமானப் பொருட்களின் விலையும் வரலாறு காணாத அளவில் ஏற்றமடைந்துள்ளது. தாரின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் குறைந்த ஒப்பந்தத்தில் எடுத்த பணிகளை முடிக்முடியாமல் ஒப்பந்ததார்கள் தவித்து வருகின்றனர். இருந்த போதிலும் மக்களின் நலன் கருதி நஷ்டத்தை பார்க்காமல் சாலை அமைக்கும் பணிகளை செய்தால் பார்த்த வேலைக்கு மாவட்ட நிர்வாகம் பில் தொகை ஒதுக்க மறுக்கிறது. கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு ஒக்குப்பட்டி, மற்றும் காரைக்குடி நகராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியை செய்தேன் .சாலை முழுமையாக முடிக்கப்பட்டுவிட்டது. ஆனால் இதுவரை வேலை பார்த்ததற்கான பில் தொகை எனக்கு இதுவரை கொடுக்கவில்லை. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்துவிட்டேன் .கடன் வாங்கி.தான் தொழில் செய்கிறோம். பார்த்த வேலைக்கான தொகையை கொடுத்தால் தான் அடுத்து அடுத்து பணி செய்ய முடியும் எனவே தமிழக அரசு தார்விலை உயர்வால் ஒப்பந்ததாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு ஒப்பந்ததார்களுக்கான பில் தொகையை உடனுக்குடன் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.