Politics
“துப்பாக்கியை வாயில் திணித்தார்கள்... பூட்ஸ் காலால் மிதித்தார்கள்!”

“72 கிலோ எடையுடன் இருந்த என் மகன் இப்போது 42 கிலோவாகிவிட்டான். ஒரு நாளைக்கு 30 முறைக்கும் மேல் ரத்தம் வெளியேறுகிறது. அவன் உயிர் பிழைப்பானா என்பதே தெரியவில்லை...” என்று கதறுகிறார் ரவிச்சந்திரன்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டிக்கு அருகேயுள்ள செந்தாரைப்பட்டியைச் சேர்ந்த பைக் மெக்கானிக் ரவிச்சந்திரன். இவரின் மகன் அஜய், 9-ம் வகுப்புடன் படிப்பை நிறுத்திவிட்டு கூலி வேலை செய்துவந்திருக்கிறார். ஜூலை 20-ம் தேதி முதல் அஜய்யைக் காணவில்லை. அப்போது, திருட்டு வழக்கு தொடர்பாக அஜய்யை தம்மம்பட்டி காவல் நிலையத்தில் அடைத்து வைத்திருப்ப தாகத் தகவல் கிடைத்திருக்கிறது. “அஜய்யைப் பார்க்க, காவல் நிலையத்துக்குச் சென்ற என்னை ஒரு காவலர் கன்னத்தில் அறைந்தார். பார்வைக் குறைபாடு காரணமாக லென்ஸ் வைத்திருப்பதாகத் தெரிவித்தும், மீண்டும் கன்னத்தில் அறைந்ததால் லென்ஸ் பாதிக்கப்பட்டது” என்ற ரவிச்சந்திரன், “அஜய்க்கு நடந்த கொடூரமும் கொஞ்ச நஞ்சமல்ல” என்று அது குறித்து விவரித்தார்...
“திருச்சி பகுதியைச் சேர்ந்த கொள்ளைக் கும்பல் ஒன்று தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் நகை, பணத்தைப் பறித்துச் சென்றிருக்கிறது. இதில் என்னுடைய மகனுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறி தம்மம்பட்டி காவல்துறையினர் அவனை அழைத்துச் சென்றனர். மூன்று நாள்கள் யாருக்கும் தெரியாமல் காவல் நிலையத்தில் அடைத்துவைத்தனர்.
அப்போது முகத்தைத் தண்ணீருக்குள் அழுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்தியிருக்கின்றனர். லத்தியால் தாக்கியிருக்கின்றனர். குற்றத்தை ஒப்புக்கொள்ளச் சொல்லி துப்பாக்கியை வாயில் திணித்து மிரட்டியிருக்கின்றனர். பூட்ஸ் காலால் வயிற்றில் எட்டி உதைத்ததுடன், வயிற்றின் மீது ஏறியும் மிதித்துள்ளனர்.
உயிருக்கு பயந்து குற்றத்தை ஒப்புக்கொண்ட பிறகு, அஜய்யை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நாள்கள் செல்லச் செல்ல அவனுக்கு வயிற்றில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. மலத்துவாரம் வழியாக அதிக அளவில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறது. ஒரு நாளைக்கு 30 முறைக்கும் மேல் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில், 72 கிலோவாக இருந்த அவனது எடை 42 கிலோவாகக் குறைந்துவிட்டது.
அஜய்க்கு ஏற்பட்ட உடல்நல பாதிப்பு தீவிரமடைந்த பிறகுதான், அவனைச் சிறையிலிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்திருக்கின்றனர். அங்கு சென்று பார்த்தபோதுதான் காவல் நிலையத்தில் நடந்த கொடுமைகள் குறித்து என்னிடம் சொல்லி அழுதான். எஸ்.பி குத்தாலிங்கம், இன்ஸ்பெக்டர் அழகுராணி, பெயர் தெரியாத மற்றொரு எஸ்.ஐ ஆகியோர் சேர்ந்துதான் என் மகனைத் தாக்கியிருக்கிறார்கள். உயிருக்கு பயந்துதான், போலீஸால் தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்து இதுவரை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறான். இனியும் அவன் உயிர் பிழைப்பானா என்று தெரியவில்லை.
காவல்துறையினரும் மருத்துவர்களும் தங்களுக்குள் ரகசியமாகப் பேசிக்கொள்கிறார்கள். ஜாமீனில் வெளியே வந்தால் காவல்துறையினரின் கொடுமை வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே, வேறு வழக்குகள் இல்லாத நிலையிலும் ஆகஸ்ட் மாதத்தில் குண்டர் சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.
அஜய் ஏற்கெனவே வேலை செய்த உள்ளூர் பெட்ரோல் பங்க் உரிமையாளர் உள்ளிட்ட சிலரின் தூண்டுதலின் பேரில் திட்டமிட்டே பொய் வழக்கில் சிக்கவைத்திருக்கிறார்கள். படிப்பறிவில்லாத எங்களுக்கு யாரும் உதவிக்கு வர மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இப்படிச் செய்திருக்கிறார்கள்.
யார் கை கால்களில் விழுந்தாவது சட்டப்படிப் போராடி, என் மகனுக்கு நடந்த இந்தக் கொடூரத்துக்கு நியாயம் கேட்பேன். அதற்கான மருத்துவ ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன” என்று கண்ணீர் வடித்தார்.இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து தம்மம்பட்டி காவல்துறையினரிடம் விசாரித்தபோது, “ஜூலை 19-ம் தேதி ஹெல்மெட் அணிந்த ஏழு பேர்கொண்ட கொள்ளைக் கும்பல், தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரவு நேரத்தில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து, கத்தி முனையில் நகை, பணத்தைப் பறித்துச் சென்றது. இது குறித்த விசாரணையில் அஜய்க்கும் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கொள்ளை, கொலை மிரட்டல் வழக்குகளில் அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். கடந்த ஆண்டு நடைபெற்ற இதே போன்ற கொள்ளைச் சம்பவத்திலும் அவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்ததால், தற்போது குண்டர் சட்டம் பாய்ந்திருக்கிறது. அனைத்தும் சட்டப்படியே நடந்துள்ளன; எந்த விதிமீறலிலும் ஈடுபடவில்லை” என்றனர்.
தம்மம்பட்டி காவல் ஆய்வாளர் அழகுராணி, “குண்டர் சட்டம் போடப்பட்டிருப்பதால் எங்கள்மீது இந்தக் குற்றச்சாட்டை வைத்திருக்கிறார்கள். இதற்கான உரிய பதில் எங்களிடம் இருக்கிறது. தேவைப்படும் இடத்தில் அதை வழங்குவோம்” என்றார்.
சேலம் மாவட்ட எஸ்.பி குத்தாலிங்கத்திடம் கேட்டபோது, “அஜய் என்பவர் யார், அவர்மீது எந்த வழக்கு இருக்கிறது என்பது எனக்குத் தெரியவில்லை. தம்மம்பட்டி காவல் நிலையத்தில் இது போன்ற ஒரு வழக்கு நடைபெற்றதாகவும் நினைவில் இல்லை. இது குறித்து விசாரிக்கிறேன். மீண்டும் உங்களைத் தொடர்புகொள்கிறேன்” என்று நழுவினார்.
செயின் பறிப்பு குற்றத்தில் அஜய் ஈடுபட்டது உண்மைதான் என எடுத்துக்கொண்டாலும், போலீஸார் ஏன் கொலைவெறியோடு தாக்குதல் நடத்த வேண்டும்... சி.எம் சார் நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும்.
