பழைய பேருந்து நிலையத்திற்கு மீண்டும் பஸ் இயக்க கோரிக்கை சாத்தியமில்லை என அதிகாரி கைவிரிப்பு
திருவாலங்காடு, செப். 7– திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் வரை, மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என, மாணவ –
திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் வரை, மீண்டும் பேருந்துகளை இயக்க வேண்டும் என, மாணவ – மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், ‘அதற்கு சாத்தியமில்லை’ என, போக்குவரத்து துறை அதிகாரிகள் கைவிரித்துவிட்டனர்.
திருவள்ளூர் பேருந்து பணிமனையில் இருந்து ,அரக்கோணம் வரை, அரசு பேருந்து தடம் எண்: ‘105சி, 212எப்’ மற்றும் தக்கோலம் வரை ‘டி-2’ உள்ளிட்ட அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், ‘105சி’ காலை 7:50 மணிக்கும், ‘டி-2’ பேருந்து 8:00 மணிக்கும், திருவாலங்காடில் இருந்து திருவள்ளூருக்கு செல்கின்றன.
இப்பேருந்தில், திருவாலங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களான பழையனுார், வீரராகவபுரம், வீரக்கோவில், வியாசபுரம், மஞ்சகுப்பம் உட்பட, 15க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவ – மாணாவியர் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பேருந்துகள், கடந்த 25 நாட்களாக புதிய பேருந்து நிலையம் வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இனி வரும் காலங்களிலும் அவ்வாறே இயக்கப்படும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால், மாணவ – மாணவியர், மாற்று பேருந்தில் ஏறி, 2 கி.மீ., தொலைவில் உள்ள திருவள்ளூர் பழைய பேருந்து நிலையம் சென்று, அங்கிருந்து பள்ளிக்கு சென்று வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் கலெக்டர் ஆய்வு செய்து, காலை, மாலை வேளைகளில், திருவாலங்காடு பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு இயக்கப்படும் அரசு பேருந்துகளை, பழைய பேருந்து நிலையம் வரை நீடித்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ – மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பாஸ்கரிடம் கேட்டபோது, “பள்ளி மாணவ – மாணவியருக்கு கட்டணமின்றி பேருந்து இயக்கப்படுகிறது. பழைய பேருந்து நிலையம் செல்ல, உடனடியாக அருகிலேயே பேருந்து உள்ளது. அதனால், நேரடியாக பழைய பேருந்து நிலையத்திற்கு பேருந்து இயக்க சாத்தியம் இல்லை” என்றார்.