Crime, law and justice
‘ரூ.20,000 கடனை அடை’- பிரசவத்திற்குச் செல்ல விடாமல் தடுத்த உரிமையாளர்; தாய், சிசுக்கு நேர்ந்த துயரம்
கடனை அடைக்க வலியுறுத்தி ஆஸ்பத்திரிக்கு செல்ல அனுமதி மறுப்பு: காஞ்சிபுரம் அருகே பிரசவ வலியால் தாயும் சேயும் பரிதாப பலி!| Debt pressure denies hospital access pregnant woman baby die near Kanchipuram

பிரசவத்தின்போது ஏற்பட்ட கடுமையான வலி மற்றும் அதிக ரத்தப்போக்குக் காரணமாக, தாய் தேன்மொழியும் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்திருக்கின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கம் ஊராட்சியைச் சேர்ந்த இருளர் சமூகத்தைச் சேர்ந்த ஆனந்தன் (40) - தேன்மொழி (35) தம்பதியினர், அரக்கோணம் சாலை வெள்ளை கேட் பகுதியில் உள்ள மரக்கடையில் கடந்த 6 மாதங்களாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கின்றனர்.
இந்நிலையில், 9 மாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்குத் திடீரென கடுமையான பிரசவ வலி ஏற்பட்டிருக்கிறது.
இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல அனுமதிக்குமாறு மரக்கடை உரிமையாளர் ஆறுமுகத்திடம் கணவர் ஆனந்தன் கேட்டிருக்கிறார்.
ஆனால், முன்பணமாகப் பெற்றிருந்த ரூ.20,000 கடனைத் திருப்பிச் செலுத்தாமல் பணியிடத்தை விட்டுச் செல்லக் கூடாது எனக் கூறி, அவர்களை மருத்துவமனைக்குச் செல்ல விடாமல் உரிமையாளர் தடுத்திருக்கிறார்.
உரிய மருத்துவ உதவி கிடைக்காததால், தங்கியிருந்த கூடாரத்திலேயே தேன்மொழிக்குப் பிரசவம் நடந்திருக்கிறது.
இச்சம்பவம் குறித்து பொன்னேரிகரை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மருத்துவமனைக்குச் செல்ல உரிமையாளர் தடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு விசாரணைக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
