Lifestyle and human interest
4000 பேர் அழிவின் விளிம்பில் பழங்குடியினர் எண்ணிக்கை விவரங்கள் சேகரிப்பு
கோவை: அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்கள் கணக்கெடுக்கும் பணியில், மாவட்டத்தில் 4,000 பேரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் பழங்குடியினர் விவகார அமைச்சகம் சார்பில், தமிழகம், கேரளம் உள்ளிட்ட 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடியின மக்களின் சமூக, பொருளாதார நிலை குறித்த கணக்கெடுப்பு நடக்கிறது.
75 பழங்குடியினர் பிரிவுகளை சேர்ந்த மக்களின் வீட்டு வசதி, வாழ்வாதாரம், பொருளாதார நிலை உள்ளிட்ட பல்வேறு விவரங்களை சேகரிக்கும் வகையில், டிஜிட்டல் செயலி வாயிலாக இந்த கணக்கெடுப்பு நடக்கிறது.
கணக்கெடுப்பை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடித்து, அதன் விவரங்களை மத்திய அரசிடம் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
என்.ஜி.ஓ., மூலமாகவும் பழங்குடியின குடியிருப்புகளில் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மாவட்டத்தில் இருளர், தோடா, குரும்பர் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் குடியிருப்புகளில் அதிகாரிகள் நேரில் சென்று விவரங்களை சேகரித்து வருகின்றனர்.
ஆனைமலை, வால்பாறை, ஆனைக்கட்டி, காரமடை, சிறுமுகை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த கணக்கெடுப்பில் இதுவரை 4,000 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 700 முதல் 800 பேரின் விவரங்களை சேகரிக்க வேண்டியுள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, மத்திய அரசு செயல்படுத்தும் நலத்திட்டங்கள் முழுமையாக சென்றடைகிறதா என்பதை கண்டறிந்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க, இந்த கணக்கெடுப்பு உதவும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.