Politics
"தரம் கெட்ட வன்மச் சொற்கள்… வன்மையான கண்டனங்கள்…” – மாணிக்கம் தாகூர்
மாணிக்கம் தாகூர், திமுக தலைவர்கள் சேகர்பாபு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் முதல்வர் விஜயை ஒருமையில் விமர்சித்ததை கண்டித்துள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரும், எம்.பி.யுமான மாணிக்கம் தாகூர், “கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ அதற்கு முற்றிலும் நேர்மாறாக இருக்கிறது.
முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆர்.எஸ்.பாரதி போன்ற மூத்த உறுப்பினர்கள் பொதுமேடைகளில் வரம்பு மீறி, முதலமைச்சர் விஜயை ஒருமையில் விளிப்பதும், தரம் கெட்ட வன்மச் சொற்களைப் பயன்படுத்துவதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. அரசியல் களத்தில் கொள்கை ரீதியான முரண்பாடுகளும் கருத்து மோதல்களும் இருப்பது இயல்புதான்.
ஆனால் ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை நோக்கி தனிநபர் வன்மத்தையும், அநாகரிகமான வசவுகளையும் வீசுவது ஒட்டுமொத்த ஜனநாயக மாண்புகளுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தல். கட்சித் தலைவரின் குடும்பம் முதல் முக்கிய நிர்வாகிகள் வரை இந்த எல்லை மீறல்களைத் தொடர்ந்து அரங்கேற்றுவதை திமுக தலைமை கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏன்?
மக்கள் தீர்ப்பை மதிக்காமல் மாநில முதலமைச்சரையே பொதுமேடைகளில் ஒருமையில் இழிவுபடுத்துவது, பெண்களுக்கு எதிரான தொடர் அவமதிப்புகள் மீது தன் கட்சிக்குள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மௌனம் காப்பது, அதிகாரத்தை இழந்த விரக்தியில் பொதுவெளியில் தரம் தாழ்ந்து கூச்சலிடுவது என திமுக இன்று தன் நம்பகத்தன்மையை இழந்து மூழ்கும் கப்பலாக மாறிக் கொண்டிருக்கிறது.
கண்ணியம் என்பது திமுகவின் மேடைகளில் வெறும் வெற்று முழக்கம்தானா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொதுவெளியிலும் தொண்டர்கள் கூட்டத்திலும் "அரசியல் களத்தில் யாரை விமர்சித்தாலும் கண்ணியத்தோடும் நாகரிகத்தோடும் பேசுங்கள்" என்று உபதேசம் செய்கிறார். ஆனால் எதார்த்த களத்தில் நடப்பதோ…
— Manickam Tagore .B🇮🇳மாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) September 12, 2026
பொது அமைதியையும் அரசியல் நாகரிகத்தையும் சீர்குலைக்கும் வகையில் முன்னாள் அமைச்சர்களும் நிர்வாகிகளும் இப்படி நாவடக்கமின்றிப் பேசுவதை திமுகவின் தலைமை கண்டும் காணாமல் இருப்பது அவர்களின் வீழ்ச்சிக்கான தெளிவான அறிகுறி. அரசியல் களம் மக்கள் நலனுக்கான ஆரோக்கியமான விவாதக் களமாக இருக்க வேண்டுமே தவிர, இத்தகைய நாகரிகமற்ற தனிநபர் வசவுகளுக்கான கூடாரமாக ஒருபோதும் மாறக்கூடாது” எனத் தெரிவித்துள்ளார்.
Chicken Storage Tips | ஃப்ரிட்ஜில் சமைக்காத சிக்கனை எத்தனை நாட்கள் சேமித்து வைக்கலாம்?
ஃப்ரிட்ஜில் சிக்கனை எத்தனை நாட்கள் வைப்பது பாதுகாப்பானது?
அதனைச் சரியாகப் பதப்படுத்தும் முறைகள் என்னென்ன?
வீக்-எண்ட் சிக்கன் வாங்கும் முன்னாடி இத கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!
