சாலையோர வியாபாரிகள் கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு
திருத்தணி, செப். 14– ‘திருத்தணியில், வங்கிகள் மூலம் கடனுதவி பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள்,
‘திருத்தணியில், வங்கிகள் மூலம் கடனுதவி பெற விரும்பும் சாலையோர வியாபாரிகள், நகராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும்’ என, திருத்தணி நகராட்சி கமிஷனர் கன்னியப்பன் கூறியுள்ளார்.
இதுகுறித்து, திருத்தணி நகராட்சி கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
திருத்தணி நகராட்சியில், ‘பிரதமர் ஸ்வநிதி’ திட்டத்தின் கீழ், வங்கிகள் மூலம் கடன் மற்றும் கிரெடிட் கார்டு பெற, சாலையோர வியாபாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்காக, நகராட்சி அலுவலகத்தில், 15ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மற்றும் 22ம் தேதி முதல் 24ம் தேதி வரை என, மொத்தம் 6 நாட்கள் ‘லோக் கல்யாண் மேளா’ நடைபெற உள்ளது.
இந்த முகாமில், சாலையோர வியாபாரிகள், தங்களது வங்கி புத்தகம், ஆதார் கார்டு, ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் போன் எண் ஆகியவற்றுடன் பங்கேற்க வேண்டும்.
முதல் கட்ட கடன் தொகையாக, 15 ஆயிரம் ரூபாயும், இரண்டாம் கட்ட கடன் தொகையாக, 25 ஆயிரம் ரூபாயும், மூன்றாம் கட்ட கடன் தொகையாக, 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். இந்த முகாமில், சாலையோர வியாபாரிகள் பங்கேற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.