Politics
அணையும் தீப்பெட்டித் தொழில்... அதிகரிக்கும் சீன லைட்டர் விற்பனை!

சுமார் 20 தீப்பெட்டிகளின் பயன்பாட்டை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. மாதம் ரூ.500 கோடி மதிப்பில் உற்பத்தியாகிவந்த தீப்பெட்டிகளின் விற்பனை, லைட்டர்களால் ரூ.100 கோடி வரை பாதிக்கப்பட்டிருக்கிறது
ஒருகாலத்தில் சமையலறையிலும் கடைகளிலும் தவிர்க்க முடியாத பொருளாக இருந்த தீப்பெட்டி, இன்று ஒரு சிறிய பிளாஸ்டிக் லைட்டரிடம் சந்தையை இழந்துவருகிறது. சீனாவிலிருந்து வரும் மலிவு விலை லைட்டர்களின் ஆதிக்கம் அதிகரிப்பதால், தமிழகத்தின் பாரம்பர்ய தீப்பெட்டித் தொழில் உற்பத்தி பாதிக்கப்பட்டுவருகிறது. இதனால், இந்தத் தொழிலை நம்பியிருக்கும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கோவில்பட்டி, சாத்தூர், சிவகாசி, சங்கரன்கோவில், குடியாத்தம், காவேரிப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் தீப்பெட்டி உற்பத்தி நடக்கிறது. 150 முழு இயந்திர ஆலைகள், 500-க்கும் மேற்பட்ட பகுதி இயந்திர ஆலைகள், 2,000-க்கும் மேற்பட்ட பேக்கிங் சார்பு ஆலைகள் இயங்கிவருகின்றன. இவற்றில் சுமார் 80 சதவிகித உற்பத்தி தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில்தான் நடைபெறுகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் இந்தத் தொழிலை நம்பியிருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்கள். தமிழகத் தீப்பெட்டிகள் இந்தியாவின் பல மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் செயலாளர் சேது ரத்தினம் நம்மிடம், “அட்டை, பேப்பர், மெழுகு, சிவப்பு பாஸ்பரஸ், பொட்டாசியம் குளோரைடு உள்ளிட்ட மூலப்பொருள்களின் விலை உயர்ந்ததால், ஒரு ரூபாய் தீப்பெட்டியின் விலையை 14 ஆண்டுகளுக்குப் பிறகு 2021, டிசம்பர் 1 முதல் 2 ரூபாயாக உயர்த்தினோம். வியாபாரிகள் அதை ஏற்காததால் ஆர்டர்கள் குறைந்தன. எனவே, 50 குச்சிகள்கொண்ட தீப்பெட்டியில் குச்சிகளின் எண்ணிக்கையை 25-ஆகக் குறைத்து ஒரு ரூபாய் விலைக்குக் கொடுத்தோம். இருப்பினும் ஆர்டர்கள் குறைந்ததால். வாரத்தில் ஆறு நாள்கள், மூன்று ஷிஃப்டுகளாக நடந்த உற்பத்தி நான்கு நாள்கள், இரண்டு ஷிஃப்டுகளாகக் குறைந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் சீன லைட்டர்கள் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்திருக்கின்றன. ரூ.20-க்கும் குறைவான விலையுள்ள லைட்டர்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால், பயன்படுத்தத் தயாரான லைட்டர்களை ‘பகுதியளவு முடிக்கப்பட்ட தயாரிப்பு’, ‘உதிரி பாகங்கள்’ என்ற வழிகளில் கொண்டுவந்து நேரடியாகச் சந்தையில் விற்பனை செய்கிறார்கள். கட்டுப்பாடு ஒரு பக்கம் இருந்தாலும், அதிலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி இன்னொரு பக்கம் இறக்குமதி நடந்துகொண்டேயிருக்கிறது. இதை மத்திய, மாநில அரசுகள் தீவிரமாகக் கண்காணித்து, தடுக்க வேண்டும்” என்றார்.
அவரே தொடர்ந்து, “சுமார் 20 தீப்பெட்டிகளின் பயன்பாட்டை ஒரு லைட்டர் ஈடுகட்டுகிறது. மாதம் ரூ.500 கோடி மதிப்பில் உற்பத்தியாகிவந்த தீப்பெட்டிகளின் விற்பனை, லைட்டர்களால் ரூ.100 கோடி வரை பாதிக்கப்பட்டிருக்கிறது. பிளாஸ்டிக் லைட்டர்களைப் பயன்படுத்திவிட்டு வீசியெறிவது மக்காத குப்பையையும் அதிகரிக்கும். புகைப்பவர்களுக்கு மட்டுமின்றி, வீட்டு அடுப்புகளிலும் பெண்கள் பயன்படுத்தும் அளவுக்கு லைட்டர்களின் பயன்பாடு அதிகரித்திருக்கிறது. எரியக்கூடிய திரவம் நிரப்பப்பட்ட இந்த லைட்டர்களை முறையாகக் கையாளாவிட்டால் தீ விபத்து உள்ளிட்ட அபாயங்களும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது” என்றும் எச்சரித்தார்.
தூத்துக்குடி எம்.பி கனிமொழியிடம் பேசினோம். “தமிழக எம்.பி-க்கள் தொடர்ந்து மக்களவையில் அழுத்தம் கொடுத்ததன் அடிப்படையில்தான் ரூ.20-க்கும் குறைவான சீன லைட்டர்களின் இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இருப்பினும், அவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகிறார்கள். அதைக் கண்காணித்து தடுக்க மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்திவருகிறோம்” என்றார்.
பா.ஜ.க மாநிலச் செயலாளர் இராம. நிவாசனிடம் பேசினோம். “2023 ஜூன் மாதம் ரூ.20-க்கும் குறைவான சீன சிகரெட் லைட்டர்களின் தடையற்ற இறக்குமதிக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. 2024 அக்டோபரில் எரிவாயுவில் இயங்கும் பாக்கெட் லைட்டர்களின் பாகங்கள் இறக்குமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன. கட்டுப்பாடுகளை மீறி லைட்டர்கள் தமிழகத்துக்குள் கொண்டுவரப்பட்டால், அதைக் கண்டறிந்து தடுக்க வேண்டும். சட்டவிரோத இறக்குமதியையும் விற்பனையையும் மாநில அரசு தீவிரமாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மத்திய அரசையே குறை சொன்னால் எப்படி?” என்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் மதன்ராஜாவிடம் பேசியபோது, “சீன லைட்டர்களின் விற்பனையால் தீப்பெட்டித் தொழில் பாதிக்கப்படுவதை அறிவேன். முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் சென்று, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
‘மேக் இன் இந்தியா’ பேசும் மத்திய அரசு, ‘மேக் இன் தமிழ்நாடு’ தொழிலான தீப்பெட்டி உற்பத்தியைப் பாதுகாக்க, விதிமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். மாநில அரசும் உரிய அழுத்தம் கொடுத்து, சட்டவிரோத இறக்குமதி, விற்பனையைத் தடுக்க வேண்டும்.
