ஆலம்பரைகுப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அறிவிப்போடு முடக்கம்!
செய்யூர்: ஆலம்பரைகுப்பத்தில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அறிவித்து ஆறு ஆண்டுகளாகியும் தற்போது வரை அடுத்தகட்டம் நகராமல் முடங்கியுள்ளதால், 36 மீனவ கிராம மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடப்பாக்கம் குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் கடலரிப்பு ஏற்பட்டு வருவதால், படகுகளை நிறுத்த இடமின்றி பரிதவித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கானத்துார் அடுத்த ரெட்டிக்குப்பம் தொடங்கி, இடைக்கழிநாடு அருகே ஆலம்பரைகுப்பம் வரை, 36 மீனவ கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில், 7,500க்கும் மேற்பட்ட மீனவர்கள், நாட்டு படகு, பைபர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, கடலில் மீன் பிடித்து வருகின்றனர்.
இங்கு பிடிக்கப்படும் மீன்கள், மொத்தமாக ஏலம் எடுக்கப்பட்டு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், சில்லரை விற்பனைக்கும் எடுத்து செல்லப்படுகின்றன.
இதில், இடைக்கழிநாடு பேரூராட்சி மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மரக்காணம் பேரூராட்சி ஆகிய பகுதிகளில், ஆழ்கடல் விசை படகு பயன்படுத்தப்படுகிறது.
இப்பகுதியில் நீண்ட கால கடலரிப்பு காரணமாக, கடற்கரை அழிந்து, கடல்நீர் நிலப்பகுதியில் படிப்படியாக உட்புகுகிறது. இதனால், படகுகள் நிறுத்த முடியாத நிலை உள்ளது.
மேலும், ஆழ்கடலில் மீன்பிடிக்க பயன்படுத்தும் விசை படகுகளை, இயற்கை சீற்றத்தின்போது பாதுகாப்பாக வைக்க, சென்னை, கடலுார் துறைமுகங்களில் நிறுத்துகின்றனர். அவற்றை அங்கு நிறுத்தவும், மீண்டும் எடுக்கவும் நேரம், எரிபொருள் விரயம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, ஆலம்பரைகுப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க, மீனவர்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களின் கடலோர எல்லையான ஆலம்பரைகுப்பம், அழகன்குப்பம் பகுதியில் உள்ள வங்க கடல், பகிங்ஹாம் கால்வாய் கழிமுக பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதுகுறித்து, 2020 பிப்., மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில், 150 கோடி ரூபாய் மதிப்பில் திட்டத்தை செயல்படுத்துவதாக, அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அது தொடர்பான ஆய்வுகளும் நடத்தப்பட்டன.
இதையடுத்து, 8.44 ஏக்கர் பரப்பளவில், 800 படகுகள் நிறுத்தும் வகையில் திட்ட மதிப்பீடு, 235 கோடி ரூபாய்க்கு உயர்த்தப்பட்டு, தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தமும் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், துறைமுகம் அமைய உள்ள பகுதி கடலோர ஒழுங்குமுறை மண்டலம் பிரிவு '-1ஏ' வகைக்குள் இடம்பெற்றுள்ளது.
இத்திட்டத்தை அறிவித்து ஆறு ஆண்டுகளை கடந்தும், தற்போது வரை பணிகளை தொடங்க முடியாமல் முடங்கியுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக ஆலம்பரைக்குப்பம் முகத்துவாரம் பகுதியில் தொடர் நீரோட்டம் இருப்பதால், வேகம் மற்றும் நீரோட்டத்தின் திசை காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டு, பழைய முகத்துவாரம் பகுதியின் தெற்கு பகுதியில் இருந்து, வடக்கு நோக்கி 100 மீட்டர் தொலைவிற்கு முகத்துவாரம் பகுதி நகர்ந்து வருகிறது.
இதனால், மீனவர்கள் படகு நிறுத்த இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். மேலும், அருகே உள்ள குடியிருப்புகள் மற்றும் தென்னை மரங்கள் கழிவெளியில் மூழ்கி வருகின்றன.
அதேபோல, அமாவாசை, பவுர்ணமி நாட்களிலும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படும். இதுபோன்ற காரணங்களால், கடற்கரை பகுதியில் கடலரிப்பு ஏற்படுகிறது.
இதே நிலை தொடர்ந்து நீடித்தால், கடப்பாக்கம் கடற்கரை பகுதி முழுதும் மண் அரிப்பு ஏற்பட்டு, படகு நிறுத்த இடம் இல்லாமல் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்க வாய்ப்புள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மீனவர்களின் நலன் கருதி மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அரசு கவனம் செலுத்தணும்! ஆறு ஆண்டுகளுக்கு முன் ஆலம்பரைக்குப்பம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்க, அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நடந்து வந்த நிலையில், என்.ஜி.ஓ.,க்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து திட்டப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது வரை மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இப்பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைந்தால், 25க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் பயனடைவர். எனவே, அரசு தனி கவனம் செலுத்தி மீன்பிடி துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். - எம்.ஆர்.குப்புராஜ், மீனவர், கடப்பாக்கம் குப்பம்.