தாம்பரத்தில் கோலாகலமாக தொடங்கியது தினமலர் -- ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ ரிமோட் கார் போட்டியில் வென்றால் ரூ.1 லட்சம் பரிசு

தாம்பரம்: 'தினமலர்' நாளிதழ், சத்யா ஏஜன்சிஸ் இணைந்து வழங்கும் 'தினமலர் ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ - 2026' வீட்டு உபயோகப் பொருட்களின் நான்கு நாள் கண்காட்சி, தாம்பரம் ரயில்வே மைதானத்தில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. வரும் 14ம் தேதி வரை தினமும் காலை 10:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை கண்காட்சியை பார்வையிடலாம்.
கண்காட்சியை தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் பாலசந்தர், சத்யா ஏஜன்சிஸ் நிர்வாக இயக்குநர் ஜாக்சன் சாமுவேல் ஆகியோர் நேற்று, ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில், சத்யா ஏஜன்சிஸ் பொது மேலாளர் சீத்தாராமன், 'தினமலர்' இணை இயக்குநர் ஆர்.லட்சுமிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
குளிரூட்டப்பட்ட 250க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ள இந்த கண்காட்சியில், தமிழகத்தின் பிரபல நிறுவனங்களுடன், வெளிநாட்டு முன்னணி நிறுவனங்களின் பொருட்கள், சேவைகளை ஒரே இடத்தில் பார்வையிட்டு வாங்கும் வகையில், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.
ரெடிமேட் ஆடைகள், அழகு சாதனங்கள், 'பேன்ஸி' பேக்குகள், டிசைனர் நகைகள், காலணிகள், லெதர் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், ரியல் எஸ்டேட், பர்னிச்சர் மற்றும் இன்டீரியர், ஆட்டோ மொபைல் உள்ளிட்ட பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.
'கேம் ஸோனில்' பேட்டரி கார், வாட்டர் போட், பலுான் ஷூட்டிங், ஒட்டகச் சவாரி ஆகியவை உள்ளன.
சிறப்பு அம்சமாக 'ஆர்.சி., எனும் ரிமோட் கன்ட்ரோல் கார் ரேஸ் சாம்பியன்ஷிப்' போட்டி நடத்தப்படுகிறது. இதில், வெற்றி பெறுவோருக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை பரிசு வழங்கப்படுகிறது.
செயற்கை நீர்வீழ்ச்சி அமைக்கப்பட்டு உள்ளதுடன், குடும்பத்தினருடன் வந்து ஷாப்பிங் செய்து, விளையாடி, உணவுகளை ருசித்து மகிழும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
'புட் கோர்ட்டில்' மட்டன், சிக்கன் பிரியாணி, கோலா, பீட்சா, பர்கர், நண்டு லாலிபால், பிங்கர் பிஷ், பிஷ் பிரை உள்ளிட்ட உணவுகளும், போண்டா, பஜ்ஜி, வடை, புட்டு, சிப்ஸ், முறுக்கு, அல்வா, ஐஸ்கிரீம், குல்பி உள்ளிட்ட சிற்றுண்டிகளும் கிடைக்கின்றன.
இருசக்கர வாகனம், கார் நிறுத்துமிடம், மருத்துவ உதவி வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புக்காக 'சி.சி.டி.வி' கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.
முதல்நாளான நேற்று ஏராளாமான பார்வையாளர்கள் குவிந்தனர். ஆர்வமுடன் கண்காட்சிகளை சுற்றிப் பார்த்ததோடு, பொருட்களையும் வாங்கினர். குடும்பத்துடன் வந்து, பொழுதுபோக்கு இடங்களையும் சுற்றிப்பார்த்து குதுாகலித்தனர்.
கண்காட்சி விநாயகர் சதுர்த்தி நாளான 14ம் தேதி வரை நடக்க உள்ளது. தொடர்ந்து விடுமுறை நாட்கள் என்பதால், தாம்பரம் மற்றும் அதை சுற்றுவட்டார பகுதி மக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.