Politics
திருவள்ளூர் நகராட்சி விரிவாக்க திட்டம் 2 ஆண்டாக கிடப்பில்!அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் ஒன்பது ஊராட்சிகள் புத்துயிர் அளிக்குமா த.வெ.க., தலைமையிலான அரசு?

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி விரிவாக்க திட்டத்திற்காக, நகராட்சியின் புதிய எல்லை வரைபடம் தயாரிக்கப்பட்டு, அதற்கான கருத்துரு கடந்த ஆட்சிக்காலத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகளாக அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால், நகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்ட ஒன்பது ஊராட்சிகளும், அடிப்படை வசதிகளின்றி தவித்து வருகின்றன. தற்போது, த.வெ.க., தலைமையிலான புதிய ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், அத்திட்டத்திற்கு புத்துயிர் அளிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
திருவள்ளூர் நகரம், கடந்த 1948ல் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. பின், திருவள்ளூரை தலைமையிடமாக கொண்டு, 1997ல் தனி மாவட்டம் உருவாக்கப்பட்டது.
தேர்வு நிலை நகராட்சியான திருவள்ளூர், 10.65 சதுர கி.மீ., பரப்பளவில் அமைந்துள்ளது. மொத்தம், 27 வார்டுகள் கொண்ட இந்நகராட்சியில், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 55 ஆயிரத்து 722 பேர் வசித்து வருகின்றனர்.
திருவள்ளூர் நகரத்தை மேம்படுத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு, நகராட்சிக்கு போதிய நிதியாதாரம் இல்லை.
சொத்து வரி, குடிநீர் கட்டணங்கள், தொழில் வரி மற்றும் கட்டட உரிம கட்டணங்கள் ஆகியவை வாயிலாக, ஆண்டுக்கு 8.50 கோடி ரூபாய் அளவிற்கே, நகராட்சியின் நிதி ஆதாரம் உள்ளது.
எனவே, நகராட்சியை விரிவுபடுத்தும் வகையில், அருகில் உள்ள காக்களூர், வெங்கத்துார், மேல்நல்லாத்துார், திருப்பாச்சூர், ஈக்காடு உள்ளிட்ட ஊராட்சிகளை, திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, 2012 முதல் நகராட்சி கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், கடந்த தி.மு.க., ஆட்சியில், வளர்ந்து வரும் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், அவற்றின் எல்லையை விரிவுபடுத்தவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அந்த வகையில், திருவள்ளூர் நகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள சிறுவானுார், சேலை, காக்களூர், ஈக்காடு, தலக்காஞ்சேரி, புட்லுார், திருப்பாச்சூர், வெங்கத்துார், மேல்நல்லாத்துார் ஆகிய ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படும் என, கடந்த 2024ல் தி.மு.க., அரசு அறிவித்தது.
மாவட்ட நிர்வாகமும், திருவள்ளூர் நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சிகளின் எல்லை, மக்கள் தொகை உள்ளிட்ட விபரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.
அதன்படி, நகராட்சியுடன் இணையும் ஊராட்சிகளின் மக்கள் தொகை 71,995 ஆக அதிகரிக்கும். இதனால், நகராட்சியின் மொத்த மக்கள் தொகை, 1,28,069 ஆக உயரும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், நகராட்சியின் பரப்பளவு, 51.02 ச.கி.மீட்டராக அதிகரிக்கும்.
நகராட்சி வருவாய் அலுவலர்கள், அப்பணியில் தீவிரமாக ஈடுபட்டு, திருவள்ளூருடன் இணைக்கப்பட உள்ள ஊராட்சி எல்லைகளுடன், நகராட்சியின் புதிய எல்லை வரைபடத்தை தயாரித்தனர்.
அந்த மாதிரி வரைபடம், கலெக்டருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவரது ஒப்புதலுடன், நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கும், ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
கருத்துரு அனுப்பி இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், அந்த திட்டத்திற்கு அரசின் ஒப்புதல் கிடைக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மேலும், சட்டசபை தேர்தல் காரணமாக, நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைப்பு குறித்து, கடந்த ஆட்சியாளர்கள் எவ்வித ஒப்புதலும் அளிக்காமல் மவுனமாகி விட்டனர். அதன் காரணமாக, நகராட்சியுடன் ஒன்பது ஊராட்சிகளும் இணைக்கப்படுமா என, சந்தேகம் நிலவி வருகிறது.
இதுகுறித்து, திருவள்ளூர் நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியுடன், ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்பட்டால், நகர வசதிகள் அனைத்தும் அந்த பகுதிகளுக்கும் கிடைக்கும்.
சுத்தமான குடிநீர், சாலை வசதி, பாதாள சாக்கடை, மின் விளக்கு உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும், நகரத்தில் கிடைப்பது போல், இணைக்கப்படவுள்ள ஊராட்சி பகுதி மக்களுக்கும் கிடைக்கும்.
ஆனால், ஆட்சி மாறிய சூழ்நிலையில், கடந்த தி.மு.க., அரசு அறிவித்த திட்டம் என்பதால், புதிய ஆட்சியாளர்கள் அத்திட்டத்தை ரத்து செய்து விடுவார்களோ என, சந்தேகம் ஏற்படுகிறது. அவ்வாறு அத்திட்டத்தைச் செயல்படுத்தாவிட்டால், திருவள்ளூர் நகரின் வளர்ச்சி பாதிப்படையும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து, திருவள்ளூர் நகராட்சி அலுவலர் ஒருவர் கூறியதாவது:
திருவள்ளூர் நகராட்சியுடன், அருகில் உள்ள ஒன்பது ஊராட்சிகள் இணைக்கப்படும் என, கடந்த தி.மு.க., அரசு உத்தரவிட்டதன் பேரில், வருவாய் துறையினரால், அந்த ஊராட்சிகளின் மக்கள் தொகை, எல்லை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதன்படி, புதிய எல்லை வரைபடம் தயாரிக்கப்பட்டு, நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்கு சமர்ப்பித்து விட்டோம். நகராட்சியுடன் ஊராட்சிகள் இணைக்கப்படும் திட்டம் குறித்து, புதிய அரசு முடிவெடுத்தால் தான், அந்த திட்டம் செயல்பாட்டிற்கு வரும்.
மேலும், தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தொடங்கி, முதல் கட்டமாக வீடுகள் எண்ணிக்கை கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது.
இன்னும் சில மாதங்கள் கழித்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. அப்பணியும் நிறைவடைந்த பின் தான், ஊராட்சிகளை திருவள்ளூருடன் இணைக்கும் முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.