பாரம்பரிய மூங்கில் பொருட்கள் தயாரிப்புக்கு... அரசு கைகொடுக்குமா?நலவாரியம் அமைத்து பாதுகாக்க வலியுறுத்தல்

உடுமலை: சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மூங்கில் கூடை உள்ளிட்ட பொருட்கள் உற்பத்தியில் பாரம்பரியமாக ஈடுபட்டு வரும் தொழிலாளர்கள், நலவாரியம் அமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். உடுமலையில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பாரம்பரியமாக மூங்கில் கொண்டு, கூடை பின்னுதல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தி செய்து வருகின்றனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இத்தகைய தொழில் சார்ந்து நுாற்றுக்கணக்கான குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
நாகரீக வளர்ச்சி காரணமாக, இது போன்ற பெரும்பாலான கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. விவசாயம் சார்ந்த பகுதிகளில் இன்றளவும் இது போன்ற கைத்தொழில்கள் முற்றிலுமாக காணாமல் போகவில்லை.
நேர்த்தியான தயாரிப்பு உடுமலை நகரம் பாபுகான் வீதியில், பச்சை மூங்கிலை விலைக்கு வாங்கி, அழகிய நேர்த்தியான பல்வேறு வடிவிலான கூடை தயாரிக்கின்றனர்.
இத்தகைய கூடைகள் காய்கறி எடுத்துச்செல்லவும், ஆடுகளை மூடி வைக்கவும், சமைத்த சாதத்தை வடிகட்டவும் பயன்படுகிறது.
மேலும், வீட்டு ஜன்னல்களில் அலங்கார 'ஸ்கிரீன்' போன்று மூங்கில் தடுப்பு, பாரம்பரிய முறையிலான முறம், கூண்டு உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்களும் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. மரம் வளர்ப்பு அதிகரித்துள்ள நிலையில், அவற்றை பாதுகாக்கும் வகையில், மூங்கில் வலை தடுப்பு செய்கின்றனர்.
மூலப்பொருள் தட்டுப்பாடு தமிழகத்தில் மூங்கில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கேரளா மாநிலத்திலிருந்து மூங்கில் விலைக்கு வாங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. சபரிமலை, அங்கமாலி, சாலக்குடி உள்ளிட்ட இடங்களில் இருந்து மூங்கில் வாங்கப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், 20 மூங்கில் கொண்ட கட்டு, 500 ரூபாய்க்கு கிடைத்த நிலையில், தற்போது, கட்டு, 2 ஆயிரம் ரூபாயாக விலை உயர்ந்துள்ளது. இதனால், மூங்கில் மதிப்புக்கூட்டு பொருட்கள் விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
மூங்கிலால் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு முன்பு அதிக மதிப்பு இருந்தது. விளைநிலங்களில், காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டால், மூங்கில் கூடைகளை பயன்படுத்தியே எடுத்துச் செல்வர்.
தற்போது, பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டால், மூங்கில் கூடை பயன்பாடு பெருமளவு குறைந்துள்ளது. பாரம்பரிய முறையிலான கூடை தயாரிப்பு, கோழி, ஆடு அடைத்து வைக்கும் பெரிய அளவிலான கூடை ஆர்டர் மட்டுமே கிடைக்கிறது.
குறைந்த விலையில் மூலப்பொருட்கள் கிடைக்க அரசு உதவ வேண்டும். பல்வேறு அரசு திட்டங்களின் கீழ் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இந்த மரக்கன்றுகளை பாதுகாக்க, மூங்கிலால் ஆன தடுப்புகள் முன்பு பயன்படுத்தப்பட்டது. தற்போது கம்பி, பிளாஸ்டிக் தடுப்புகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால், மூங்கில் பொருட்கள் விற்பனை தடைபடுவதுடன், எங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத மூங்கில் தடுப்புகளை அரசு திட்டங்களில் பயன்படுத்த வேண் டும். இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை நலவாரியத்தில் சேர்த்து நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். அரசு கண்காட்சியில் மூங்கில் பொருட்களை காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இத்தகைய உதவிகளால் இத்தொழிலின் பாரம்பரியம் நீண்ட காலம் நீடிக்கும்.
இவ்வாறு, கூறினர்.