Politics
எப்படிப் போகும் எதிர்கால அரசியல் தவிப்பில் மாவட்ட அரசியல்வாதிகள்
ஸ்ரீவில்லிபுத்துார்: எதிர்கால அரசியல் போக்கு எப்படி இருக்கும், அது மாவட்டத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், தங்கள் எதிர்கால அரசியல் வாழ்க்கையை எப்படி கொண்டு செல்வது என்ற மன குழப்பத்தில் விருதுநகர் மாவட்ட அரசியல்வாதிகள் தவித்து வருகின்றனர்.
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பாராத வகையில் த.வெ.க., வெற்றி பெற்று, தி.மு.க. கூட்டணியில் இருந்த கட்சிகளின் ஆதரவோடு தற்போது ஆட்சி செய்து வருகிறது.
இத்தகைய அரசியல் சூழல் மாநில அளவிலும், தேசிய அளவிலும் பாரம்பரிய கட்சிகளுக்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், விருதுநகர் மாவட்டத்தை பொறுத்தவரை பல ஆண்டுகளாக தி.மு.க., அ.தி.மு.க.வில் பயணித்த கட்சி நிர்வாகிகளுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதில் மாவட்டத்தில் அ.தி.மு.க.வில் இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களும், அரசியல்வாதிகள் போர்வையில் இருந்த பல அரசு ஒப்பந்ததாரர்கள் எதிர்கால பொருளாதார நலன் கருதியும், அடுத்தாண்டு நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலை கருதி முன்னாள் கவுன்சிலர்களும் தற்போது த.வெ.க.,வில் இணைந்துள்ளனர்.
இதுபோல் சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில் தி.மு.க.வில் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதும், தங்களுடைய கூட்டணி கட்சிகள் அணி மாறியதும், ஆளுங்கட்சி என்ற அந்தஸ்து இல்லாததாலும் அக்கட்சியினர் ஒருவித தயக்கத்துடன் காணப்படுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் எதிர்கால அரசியல் போக்கு எப்படி இருக்கும், மாவட்டத்தில் தங்கள் எதிர்கால அரசியல் வெற்றி பெறுமா, தொடர்ந்து தங்கள் அரசியல் அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ள எப்படி செயல்பட வேண்டும் என்ற மனநிலையில் இரு திராவிட கட்சிகளின் நிர்வாகிகளும் தவித்து வருகின்றனர்.