போலீஸ் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி துவக்கம்

பெங்களூரு: பெங்களூரிலுள்ள போலீஸ் நிலையங்களில் வழக்குகளில் சிக்கி, பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி நேற்று துவங்கியது.
பெங்களூரிலுள்ள போலீஸ் நிலையங்கள், அதன் சுற்றுப்புற பகுதிகளில் வழக்குகளில் சிக்கி பல ஆண்டுகளாக ஆயிரக்கணக்கிலான வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியை நேற்று அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா துவங்கி வைத்தார். முதல் கட்டமாக, ஜெயநகர் போலீஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்த வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதையடுத்து, அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா அளித்த பேட்டி:
பெங்களூரில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில், பல ஆண்டுகளாக நின்று கொண்டிருக்கும் பைக், கார் என 1௧ ஆயிரத்து 346 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட உள்ளன. அப்புறப்படுத்தப்பட்ட வாகனங்கள் நகரின் பல பகுதிகளில் தேர்வு செய்யப்பட்ட 7 இடங்களில் நிறுத்தப்படும்.
போலீஸ் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருப்பதால், மக்கள் நடமாட்டத்திற்கு சிரமம் ஏற்பட்டதாக புகார் வந்தது. இதனால் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
நீதிமன்ற வழக் குகள் நிலுவையில் உள்ள வாகனங்கள் வேறு இடத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்படும். வாகனங்களை அகற்றும் பணியை, ஒரு மாதத்திற்குள் முடிக்குமாறு மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

