வாசகர்கள் வருகையின்றி காற்றாடும் நிலையில் கிராமப்புற நுாலகங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தாத அதிகாரிகள்
திருப்புல்லாணி: மாவட்ட நுாலகத்தின் கட்டுப்பாட்டில் ரெகுநாதபுரம், திருப்புல்லாணி, உத்தரகோசமங்கை, கீழக்கரை, சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கிராமப்புற கிளை நுாலகங்கள் வாசகர்கள் வருகையின்றி உள்ள நிலையில் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தவில்லை.
வாசிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக கிராமப்புற மக்களுக்கு நாளிதழ்கள், வார, மாத இதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்பிலான புத்தகங்களை வழங்கி தினசரி வாசிப்பு பழக்கத்தை வளர்க்கவும், கல்வி மற்றும் போட்டி தேர்வுக்கு வழிகாட்டுதல், பள்ளி, கல்லுாரி மாணவர்களின் படிப்புக்கு தேவையான பாடப் புத்தகங்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்யும் வகையில் இளைஞர்களுக்கு வழிகாட்டுதல் உள்ளிட்டவைகளுக்கு பங்களிக்கின்றன.
வேளாண்மை, சுகாதாரம் அரசு திட்டங்கள், சட்டம், தொழில் நுட்பம் தொடர்பான தகவல்களை கிராம மக்களுக்கு கொண்டு சேர்க்கவும், முதியோர்கள், பெண்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ளதான வழியில் செலவிடவும் இது போன்ற கிராமப்புற நுாலகங்கள் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை வழி காட்டின. தற்போது பெருவாரியாக நுாலகங்களில் வாசகர்கள் வருகை வெகுவாக குறைந்துள்ளது.
முன்பு கிராமப்புற கிளை நுாலகங்களில் புரவலர்கள் மற்றும் வாசகர்கள் அதிகளவு வருகை தந்த நிலை மாறி தற்போது காற்றாடும் நிலை ஏற்பட்டுள்ளது. வாசகர்களை கவர்வதற்கான எவ்வித திட்டங்களும் இல்லை. கட்டடத்தின் பெரும் பகுதியை புத்தகங்கள் ஆக்கிரமித்து இருந்தாலும் அவற்றை படிப்பதற்கு பொதுமக்களுக்கு உரிய விழிப்புணர்வு ஏற்படவில்லை.
அரசு குறிப்பிட்ட தொகையை நுாலகங்களுக்கு செலவிட்டு தளவாடப் பொருள்கள் மட்டும் கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினாலும் அவை முழுமையாக கிராமப் பகுதிகளுக்கு சென்றடையாத நிலை தொடர்கிறது. வாசகர்கள் வருகை பதிவேடுகள் மட்டும் பெயரளவிற்கு கண் துடைப்பாக நிரப்பப்பட்டு வருகிறது.
எனவே மாவட்ட நுாலகத்துறை அலுவலர்கள், வாசகர்களுக்கு புத்தகங்களின் மீது ஆர்வத்தை துாண்டுவதற்கு உரிய வழிகாட்டுதலை வழங்க வேண்டும். இதே நிலை தொடர்ந்தால் அரசின் தொலைநோக்குப் பார்வை கேள்விக்குறியாக மாறும் அபாயம் உள்ளது என்றனர்.