Arts, culture, entertainment and media
உயிர்ச்சத்து நிறைந்த ‘காவேரித் தங்கம்’, 100% அதிக மகசூல் தரும் ‘காவேரி நாடன்’!
``வெள்ளம், வறட்சி ஆகிய இரண்டு விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது, எல் நினோ. சமீபகாலமாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையாக இருந்து வருகிறது

புதிய வாழை ரகங்கள்!
திருச்சி மாவட்டம், போதாவுரில் இயங்கி வரும் தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் 33-வது நிறுவன நாள் மற்றும் உழவர் தின விழா, கடந்த ஆகஸ்ட் 21-ம் தேதி நடைபெற்றது. இந்த விழாவில் திருச்சி, கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விழாவில் `காவேரித் தங்கம்', `காவேரி நாடன்' ஆகிய இரண்டு புதிய வாழை ரகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. `சூப்பர் எல் நினோவால் விவசாயத்தில் ஏற்படும் சவால்கள் - மேலாண்மை' என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நடத்தப்பட்டன.
விழாவில் தலைமையுரையாற்றிய தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் ஆர்.செல்வராஜன், ``இந்த மையம் தற்போது அறிமுகம் செய்துள்ள காவேரித் தங்கம் எனும் வாழை ரகம்… ரஸ்தாளி, ரூபெஸ்டா ரகங்களின் நல்லியல்புகள் சேர்ந்த புதிய ரகம். வழக்கமான வாழை ரகங்களைக் காட்டிலும் இதில் 10 மடங்கு அதிகமான புரோ வைட்ட மின் ஏ உள்ளது. இதில் தனித்துவமான நறு மணம் இருக்கும். அறுவடை செய்ததிலிருந்து 15 நாள்கள் வைத்திருந்தாலும் அழுகாது.
15 ஆண்டுகள் ஆராய்ச்சி!
மற்றொரு ரகமான காவேரி நாடன், வழக்கமான வாழை ரகங்களை விடவும், 100 சதவிகிதம் அதிக மகசூல் தரும். இது, பச்சை நாடன் வகையைச் சேர்ந்த ரகம். கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் தீவிர ஆராய்ச்சி யின் முடிவில் இந்த மேம்பட்ட வாழை ரகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட இந்த 2 ரகங்களின் செடிகள் தமிழ்நாடு, கேரளம், கர்நாடகா, ஆந்திரா, மகா ராஷ்டிரா, குஜராத், பீஹார், மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் உள்ள வாழை விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளன.
33 ரகங்களின் மரபணு சேகரிப்பு!
பருவ நிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் திறன் கொண்ட 8 வாழை ரகங்களை ஏற்கெனவே அறிமுகம் செய்துள்ளோம். சுமார் 33 ரகங்களில் புதிய வாழை மரபணுக்களைச் சேகரித்துள்ளோம். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்ஹான்பூரில் 17 இடங் களிலும், மகாராஷ்டிராவின் ஜல்காவ்ன், தசனூரில் ஆகிய பகுதிகளில் 4 இடங்களிலும் `ஒருங்கிணைந்த வாடல் நோய் மேலாண்மைத் திட்டம்' செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு ஒரு மில்லியன் டன் வாழை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகிறது. கடந்த 8 ஆண்டுகளில் வாழை ஏற்றுமதி 7 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டில் வாழை ஏற்றுமதி, சாதனை அளவு 378.2 மில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது.
வாழைத்தண்டு சாறு பிழியும் எந்திரம்!
இந்தியாவிலிருந்து ரஷ்யாவுக்கு வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தின் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, தமிழ் நாட்டிலிருந்து, கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகம் வழியாக ரஷ்யாவுக்கு வாழைப் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளும் ஆராயப்படும்.
இயந்திர மயமாக்கலில் ஒரு முக்கிய முன்னேற்றமாக, கரும்புச்சாறு பிழியும் இயந்திரத்தைப் போலவே, வாழைத் தண்டிலிருந்து சாறு பிழியும் இயந்திரம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்தத் தொழில் நுட்பம் மகளிர் சுய உதவிக் குழுக்கள், உழவர் உற்பத்தி யாளர் நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகள் மற்றும் குறு, சிறு வணிகர்கள் ஆகியோருக்குப் புதிய தொழில்முனைவு வாய்ப்புகளை உருவாக்கக் கூடும். வாழையை அடிப்படை யாகக் கொண்டு 60-க்கும் மேற்பட்ட மதிப்புக் கூட்டப் பட்ட பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிகழாண்டில் இந்த மையம் 1.77 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு அமைப்புகளிடமிருந்து 22 ஆராய்ச்சித் திட்டங்களுக்கு 21 கோடி ரூபாய் நிதி பெற்றுள்ளோம்’’ என்றார்.
விழாவில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த கண்காட்சியில்… நூற்றுக்கும் மேற்பட்ட வாழை ரகங்கள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வாழை மதிப்புக்கூட்டல் பொருள்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வாழைச் சாகுபடியில் சாதனை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் வகையில்... `சிறந்த வாழை விவசாயி', `சிறந்த வாழை மரபணு சேகரிப்பவர்', `சிறந்த பெண் தொழில்முனைவோர்', `சிறந்த வேளாண் அறிவியல் மையம்', `சிறந்த தொழில் முனைவோர்', `சிறந்த வாழை ஏற்றுமதியாளர்' மற்றும் `சிறந்த திசு வளர்ப்பு உற்பத்தி' உள்ளிட்ட பிரிவுகளில் 16 நபர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
பழங்குடியினர் சமூகங்களின் நலனுக்காக ஆற்றிய பங்களிப்புக்காக, தமிழ்நாடு பழங் குடியினர் நலத்துறை இயக்குநரகத்தின் இயக்குநர் எஸ்.அண்ணாதுரை கவுரவிக்கப் பட்டார்.
பல பயிர்ச் சாகுபடி அவசியம்!
இந்த விழாவில் சிறப்புரையாற்றிய கேரள மாநிலம், காசர்கோடு மத்தியத் தோட்டக்கலை நிறுவன இயக்குநர் முனைவர் கே. பாலச்சந்திர ஹெப்பார், ``மண், நீர், பயிர், வளிமண்டலம் ஆகியவை வேளாண்மையின் முக்கியக் கூறுகளாகக் கருதப்படுகின்றன. காலநிலை மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அதேசமயம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தை வளமாக வைத் திருத்தல், காலநிலை மாற்றத்துக்கு ஏற்ற பயிர்களைத் தேர்ந்தெடுத்தல், பயிர்ச் சாகுபடி முறைகளில் மாற்றங்கள் செய்தல் ஆகியவை மூலம், பயிர் விளைச்சலை இயன்றவரை நல்ல முறையில் பாதுகாக்க முடியும். ஒற்றைப் பயிர் முறைக்குப் பதிலாக, ஊடுபயிராகப் பலவிதமான பயிர்கள் சாகுபடி செய்யும் முறையை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், இது வயல்வெளியில் ஒரு சாதக மான காலநிலையை உருவாக்கி, எல் நினோவின் பாதகமான விளைவுகளைத் தணிக்க உதவும்’’ என்றார்.
விழாவில் கோவை, தென்னை வளர்ச்சி வாரிய இயக்குநர் .இ.அறவாழி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகக் காலநிலை மாற்ற ஆராய்ச்சி மைய இயக்குநர் முனைவர் எம்.கோவிந்தராஜு உள்ளிட்ட பலர் உரையாற்றினர்.
மண்ணின் ஈரப்பதத்தைக் காக்க வேண்டும்!
``வெள்ளம், வறட்சி ஆகிய இரண்டு விதமான பாதிப்புகளையும் ஏற்படுத்தக் கூடியது, எல் நினோ. சமீபகாலமாக, ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தென்மேற்குப் பருவமழை பற்றாக்குறையாக இருந்து வருகிறது. இதுபோன்ற காலநிலை மாறுபாடுகள் அடிக்கடியும், சில சமயங்களில் 2-3 ஆண்டு இடைவெளியிலும் ஏற்படும். இதனால், மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கவும், காலநிலை மாறுபாட்டின் தாக்கத்தைக் குறைக்கவும்... மூடாக்கு இடுதல் மற்றும் சொட்டு நீர்ப் பாசனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை விவசாயிகள் மேற்கொள்ள வேண்டும்’’ என்று வல்லுநர்கள் வலியுறுத்தினர்.
குழு விவாதம்!
`நெல், கரும்பு மற்றும் தென்னைச் சாகுபடியில் உள்ள சவால்கள், தணிப்பு உத்திகள்' மற்றும் `வாழைச் சாகுபடியில் வாடல் நோய் மேலாண்மை' ஆகிய தலைப்புகளில் குழு விவாதங்கள் இடம் பெற்றன. இதில், விவசாயிகள், வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் தொழில்முனைவோர் பங்கேற்றனர்.
