Crime, law and justice
நில தகராறில் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை: ஐகோர்ட் உத்தரவு
பெங்களூரு: நில தகராறு காரணமாக, நபரை சுட்டு கொலை செய்தவருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின், குட்டந்தி கிராமத்தில் வசித்த சாபு நாணய்யா, 35, செரன்டா மோகன், 38, இடையே நில தகராறு இருந்தது.
கடந்த, 2015ம் தேதி, சாபு நாணய்யா தன் வீட்டருகில் நடந்து செல்லும் போது, துப்பாக்கியுடன் மரத்தின் பின்னே மறைந்திருந்த செரன்டா மோகன், சாபு நாணய்யாவை குறி வைத்து, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டார். இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
செரண்டா மோகன், போலீஸ் நிலையத்துக்கு சென்று சரண் அடைந்தார். சம்பவத்தை நேரில் பார்த்த, சாபு நாணய்யாவின் மனைவி, போலீசாரிடம் புகார் அளித்தார்.
செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். விசாரணை நடத்திய நீதிமன்றம், சாட்சிகள் சரியாக இல்லை என, கூறி அவரை விடுதலை செய்தது.
இது குறித்து, கேள்வி எழுப்பி அரசு தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனு தொடர்பாக, நீதிபதி சந்தேஷ், நீதிபதி பிரமோத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில், நேற்று விசாரணை நடந்தது. வாதம், பிரதிவாதங்களை ஆராய்ந்த நீதிபதிகள், செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டனர்.
'சம்பவ நாளன்று, துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு, வெளியே ஓடி வந்த சாபு நாணய்யாவின் மனைவி, கையில் துப்பாக்கியுடன் வந்த செரன்டா மோகனை பார்த்துள்ளார்.
அப்போது இவர், 'உன் கணவருக்கு சரியான பாடம் கற்பித்துவிட்டேன்' என, கொலையானவரின் மனைவியிடம் கூறியுள்ளார். இது முக்கியமான சாட்சி.
'வழக்கு தொடர்பாக, தடயவியல் ஆய்வக அறிக்கைமற்றும் வல்லுநர்களின் சாட்சியப்படி, கொலையானவரின் உடலில் பாய்ந்திருந்த குண்டுகள், குற்றவாளியின் துப்பாக்கியில் இருந்து சுடப்பட்டது உறுதியாகிறது.
சம்பவத்துக்கு பின், குற்றவாளியே துப்பாக்கியுடன், போலீஸ் நிலையத்துக்கு வந்து சரண் அடைந்தார். அவர் பயன்படுத்திய குண்டுகளின் காலி தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
'இவ்வளவு சாட்சிகள் இருந்தும், இவற்றை பொருட்படுத்தாமல் செஷன்ஸ் நீதிமன்றம், தவறாக முடிவு செய்துள்ளது. செரன்டா மோகன் குற்றவாளி என, உறுதியாகிறது' என அறிவித்த நீதிபதிகள், குற்றவாளிக்கு ஆயுள் தண்டனையும், 1.10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தனர்.