Arts, culture, entertainment and media
வெங்காய எக்ஸ்பிரஸ்... வெங்காய விலையைக் குறைக்க மத்திய அரசின் முயற்சி!
சிறப்பு ரயில் போக்குவரத்து மட்டு மன்றி, அரசு தன்னிடம் உள்ள அவசரக் காலக் கையிருப்பு வெங்காயத்தையும் சந்தைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது

இந்திய ரயில்வே துறையால் இயக்கப்படும் மும்பை எக்ஸ்பிரஸ், மைசூர் எக்ஸ்பிரஸ், வைகை எக்ஸ்பிரஸ், சோழன் எக்ஸ்பிரஸ், செங்கோட்டை எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இன்னும் பல்வேறு ரயில்கள் குறித்து நாம் அறிந்திருக்கிறோம். இந்த நிலையில் தற்போது இந்திய ரயில்வே துறை, ‘வெங்காய எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் புதிய ரயில்களை இயக்கத் தொடங்கியிருப்பது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக வெங்காய விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்தச் சூழலில், அதன் விலையைக் கட்டுப் படுத்தும் வகையில் மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து டெல்லி, சென்னை, கொச்சி, குவாஹாட்டி போன்ற முக்கிய நகரங்களுக்கு வெங்காயத்தை விரைவாக எடுத்துச் செல்ல ‘கந்தா எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு ரயில்களை மத்திய அரசு இயக்கத் தொடங்கியுள்ளது. மராத்தி மொழியில் ‘கந்தா’ என்றால் ‘வெங்காயம்’ என்று பொருள்.
அரசு அறிக்கையின்படி... சில்லறை விற்பனையில் ஒரு கிலோ வெங்காயத்தின் சராசரி விலை 50 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தைவிட 45 சதவிகிதமும், கடந்த மாதத்தைவிட 19 சதவிகிதமும் அதிகம். உற்பத்தி குறைவு மற்றும் வெங்காய வரத்து குறைந்ததே விலை உயர்வுக்கு முக்கியக் காரணம். தற்போதைய நிலவரப்படி, டெல்லியில் ஒரு கிலோ வெங்காயம் 65 ரூபாய் வரையிலும், சென்னையில் 58 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.
தினசரி சமையலில் தவிர்க்க முடியாத அத்தியாவசியப் பொருளாக இருக்கும் வெங்காயத்தின் விலை தொடர்ச்சி யாக உயர்ந்து வருவது, ஏழை மற்றும் நடுத்தர மக்களைப் பாதிப்பதுடன், நாட்டின் பணவீக்கத்தையும் அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், நிலைமை மேலும் தீவிரமடையும் முன்பே விநியோகத்தைச் சீரமைக்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சிறப்பு ரயில் போக்குவரத்து மட்டு மன்றி, அரசு தன்னிடம் உள்ள அவசரக் காலக் கையிருப்பு வெங்காயத்தையும் சந்தைக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. தட்டுப்பாடு நிலவும் நகரங்களுக்கு வெங்காயத்தை உடனடியாக அனுப்பும் போது சில்லறை விற்பனை விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில்... கடந்த ஜூலை மாதத்தில் விவசாயி களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் வெங்காயத்தின் விலையை, ஒரு குவிண்டாலுக்கு 1,875 ரூபாயிலிருந்து 2,125 ரூபாயாக (13 % உயர்வு) மத்திய அரசு உயர்த்தி யிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காய உற்பத்தி மையங்களிலிருந்து பயன்பாடு அதிகம் உள்ள பெரிய நகரங்களுக்கு ரயில்கள் மூலம் பெருமளவில் வெங்காயத்தைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், சந்தையில் நிலவும் தட்டுப்பாடு தற்காலிகமாகச் சரியாகி விலை படிப்படியாகக் கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கையில் வெங்காய எக்ஸ்பிரஸ் ரயில்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
கொழிஞ்சி...பசுந்தாள் உரம் மட்டுமல்ல...
மனிதர்களுக்கு நன்மை செய்யும் மருந்தும்கூட!
`கொழிஞ்சி’ (Tephrosia purpurea) (Tephrosia purpurea) என்பது இயற்கை விவசாயத்தில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் ஒரு சிறந்த மூலிகைச் செடி. இது, பெரும்பாலும் பசுந்தாள் உரமாகத்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. நெல் சாகுபடிக்கு முன் நிலத்தில் கொழிஞ்சி செடிகளை வளர்த்து, மடக்கி உழுவதன் மூலம் மண்ணுக்கு இயற்கை நைட்ரஜன் (தழைச்சத்து) மற்றும் மணிச்சத்து பெருமளவில் கிடைக்கும். இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. இதை ஆடு, மாடுகள் உண்ணாததால் நிலத்தில் பசுந்தாள் உரப்பயிராக வளர்ப்பது எளிது. இந்த விவரங்களைப் பெரும்பாலான இயற்கை விவசாயிகள் அறிந்துவைத்திருப்பார்கள்.
இது பசுந்தாள் உரம் மட்டுமல்ல… மனித உடலுக்குப் பலவிதமான நன்மைகள் செய்யும் மிகச் சிறந்து மருந்து செடி என்பதைப் பலரும் அறிந்திருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு.
குடல் புண்ணை குணப்படுத்தும்!
இது, சித்த மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகிப்பதாக பாரம்பர்ய மருத்துவர்கள் சொல்கிறார்கள். செரிமானக் குறைபாடுகள், வயிற்றுவலி, அஜீரணம், வாயுத் தொல்லை மற்றும் குடல் புண் ஆகியவற்றைக் குணப்படுத்த, கொழிஞ்சி வேர் மற்றும் இலைகள் உதவும். வேர்ப் பொடியை நீரில் கொதிக்க வைத்துக் குடிநீராக அருந்தலாம்.
கல்லீரல், மண்ணீரல் பாதுகாப்பு!
கொழிஞ்சி வேர் பொடியுடன் மிளகு சேர்த்துச் செய்யப்படும் கஷாயம், கல்லீரல் வீக்கம் மற்றும் மண்ணீரல் தொடர்பான பித்த நோய்களைச் சீராக்கப் பயன்படுகிறது.
கபம், நெஞ்சடைப்பு, இருமல் மற்றும் ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளைக் குறைக்க இதன் வேர்ப்பொடிப் புகை மற்றும் கஷாயம் நல்ல நிவாரணம் தரும். இதன் இலைகளை உலர்த்திப் பொடியாக்கி உணவில் சேர்த்துவர குடல் பூச்சிகள் அழியும்.
உடலில் ஏற்படும் வீக்கங்கள், கட்டிகள் மற்றும் சில வகையான சருமத் தொற்றுப் பிரச்னைகளைக் கட்டுப்படுத்தும் பண்புகள் இதில் உள்ளன. கொழிஞ்சி வேர்ப்பொடி இட்ட நீரைக் கொண்டு வாய் கொப்பளித்து வந்தால் பல்வலி மற்றும் வாய்ப்புண் குணமாகும்.
இந்தத் தகவல்கள் சித்த மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. பாரம்பர்ய மருத்துவர்களின் ஆலோசனை பெற்று இதை மருந்தாகப் பயன்
படுத்தலாம்.
