தசரா யானை அபிமன்யுவுக்கு புதிய கவுரவம் ஜம்பு சவாரி ஊர்வலத்தை நடத்துகிறது

மைசூரு: தசரா யானை அபிமன்யுவுக்கு, கர்நாடக அரசு புதிய கவுரவம் வழங்கியுள்ளது. ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் வாய்ப்பு, அபிமன்யுவுக்கு கிடைத்துள்ளது.
மைசூரு தசரா அக்டோபர் 11 ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. தசராவின் நிறைவு நாளில் நடக்கும் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்டமாக ஒன்பது யானைகள், முகாம்களில் இருந்து மைசூருக்கு வந்துள்ளன.
அபிமன்யுக்கு ஓய்வு கடந்த 2020 முதல், 2025 வரை, ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, சாமுண்டீஸ்வரி அம்மன் வீற்றிருக்கும் 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை, அபிமன்யு யானை சுமந்து வந்தது.
அந்த யானைக்கு 60 வயதாகி விட்டதால், அம்பாரி சுமக்கும் பொறுப்பில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டது. முதல்கட்ட யானைகளை மைசூருக்கு அழைத்து வந்த போது, அபிமன்யு யானைக்கு பிரிவு உபசார நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.
அபிமன்யு யானையின் ரசிகர்கள், இந்த ஆண்டு ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் போது, ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் வாய்ப்பை அபிமன்யுவுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்று, அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இந்நிலையில், வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி நேற்று, @அபிமன்யுவின் விலைமதிப்பற்ற சேவைக்கு அரசின் சிறப்பு கவுரவம்' என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், 'ஆறு ஆண்டுகளாக அம்பாரியை சுமந்து மக்களின் இதயங்களை வென்ற, அபிமன்யு யானையின் சேவையை பாராட்டும் வகையில், ஜம்பு சவாரி ஊர்வலத்தை முன்நின்று நடத்தும் பொறுப்பு, அபிமன்யுவுக்கு வழங்கப்பட்டுள்ளது' என கூறியுள்ளார்.
குதிரை படைகள் ஜம்பு சவாரி ஊர்வலத்தின் போது, அபிமன்யு யானை முதலில் செல்லும். யானையை பின்தொடர்ந்து குதிரை படைகள், கலை, கலாச்சார குழு, அம்பாரி சுமக்கும் யானை, அதன் பின், மற்ற யானைகள் செல்லும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோல மைசூரு தசராவின் போது அரச குடும்பத்தினர் தினமும் அரண்மனை வளாகத்தில் உள்ள கோவில்களில் பூஜை செய்வர். தர்பாரும் நடக்கும். அப்போது தசராவில் பங்கேற்க வந்திருக்கும் ஏதாவது ஒரு யானையை, பட்டத்து யானையாக தேர்வு செய்வர். அந்த யானையில் தான் அரச குடும்பத்தின், இளவரசர் செல்வார்.
இந்த ஆண்டு பட்டத்து யானையாக, தசராவில் பங்கேற்க வந்துள்ள ஸ்ரீகண்டா யானையை, மன்னர் குடும்பத்தின் பிரமோதா தேவி நேற்று தேர்வு செய்தார்.
மைசூரு தசராவின் போது பல கலை நிகழ்ச்சிகள் நடக்கும். இளைஞர், விவசாய, குழந்தைகள் தசராவும் நடைபெறும்.
இளைஞர் தசராவை துவக்கி வைக்க வரும்படி, நடிகர் பிரபுதேவாவை சென்னையில் உள்ள அவரது வீட்டில், இளைஞர் தசரா கமிட்டி பொது செயலர் சோமசேகர், செயலர்கள் அருண், சத்தியமூர்த்தி ஆகியோர் நேற்று சந்தித்து முறைப்படி அழைப்பு விடுத்தனர்.