Crime, law and justice
கோவையில் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் மாயம்: ஆட்சியர் விசாரணைக்கு உத்தரவு
கோவை வெளிவட்ட சாலை நிலம் கையகப்படுத்தல் தொடர்பான ஆவணங்கள் மாயம் குறித்து விரிவான விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், வெளிவட்ட சாலைக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விரிவான விசாரணை நடத்த, மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில், வெளிவட்ட சாலை அமைக்கும் திட்டத்துக்காக, பட்டணம் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிகள், 1974 ஆம் ஆண்டு துவங்கி, 1978 ஆம் ஆண்டு முடிவடைந்தது.
இதில் ராமசாமி கோனார் என்பவரின் 3.50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில், அதில் 21 சென்ட் நிலம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதால், மீத நிலத்தை கையகப்படுத்தியது காலாவதியாகி விட்டதால், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் அல்லது இழப்பீடு வழங்க வேண்டும் என ராமசாமி கோனார் தத்தெடுத்த நாகராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
தனி நீதிபதி முன் இந்த வழக்கு விசாரணையில் இருந்த போது, நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த ஆவணங்கள் காணாமல் போனதால், நிலம் தேவைப்படுகிறதா என பரிசீலிக்க வேண்டும் எனவும், தேவைப்பட்டால் உரிய இழப்பீட்டை வழங்க வேண்டும் என்றும் தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து அரசுத்தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அப்போது, காணாமல் போன அசல் கோப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட்டன. கிராமத்தின் நிலம் சம்பந்தப்பட்ட வருவாய் ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்த நீதிபதிகள், வருவாய் துறை ஆவணங்களில், குறிப்பிட்ட அந்த நிலம் அரசு புறம்போக்கு என குறிப்பிடப்பட்டுள்ளதையும், அதில் ராமசாமி கோனார் பெயர் சேர்க்கப்பட்டு திருத்தப்பட்டுள்ளதையும் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து, வருவாய் துறை ஆவணத்தை திருத்தி போலி ஆவணம் தயாரித்தது தொடர்பாகவும், நீதிமன்றத்தில் நிலம் கையகப்படுத்தப்பட்ட ஆவணங்கள் காணாமல் போனது தொடர்பாக, விரிவான விசாரணை நடத்த கோவை மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையின் அடிப்படையில் இந்த முறைகேட்டில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
