சிப்காட் சாலையில் வரிசைக்கட்டி நிற்கும் கனரக வாகனங்களால் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார்: எறையூர் சிப்காட் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தொழிற்சாலை வாகனங்களால், அவ்வழியாக செல்லும் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்காவில் 200க்கும் அதிகமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதன் ஒருபகுதியான, எறையூர், வைப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன.
இந்த சிப்காட் சாலைகளின் வழியாகவே, மேற்கூறிய கிராமத்தின் பல்வேறு தேவைகளுக்காக படப்பை, தாம்பரம், சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.
இந்த சாலையில் உள்ள தனியார் தொழிற்சாலைகளுக்கு ஊழியர்கள், மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்ல நாளொன்றுக்கு 100க்கும் மேற்பட்ட, கன்டெய்னர் மற்றும் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
அவ்வாறு வரும் வாகனங்கள், வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சிப்காட் சாலையில் நிறுத்துகின்றனர். சாலையின் இறுப்புறமும் பல மணி நேரம் நிறுத்தும் கன்டெய்னர் வாகனங்களால், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், குறுகிய சாலையில் விபத்து ஏற்படும் அச்சத்தில் சென்று வருகின்றனர்.
இந்த தொழிற்சாலைக்கு அருகில், சிப்காட் நிறுவனத்தின் கனரக வாகன நிறுத்த முணையம் அமைக்கப்பட்டும், இவ்வாறு சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்களால், இரவு நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகின்றன.
எனவே, போக்குவரத்திற்கு இடையூறாக சிப்காட் சாலைகளில் நிறுத்தும் வாகனங்கள் மீது, சிப்காட் ரோந்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.