கடந்த ஓராண்டிற்கு மேலாக கிடப்பில் கிடந்த சலவாதி உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கு தீர்வு கிடைத்தது: வரும் 21 ம் தேதி பூமிபூஜையுடன் பணிகள் துவக்கம்

திண்டிவனம்: கடந்த ஒராண்டிற்கு மேலாக எந்த வேலையும் நடைபெறாமல் கிடப்பில் கிடந்த, திண்டிவனம்-சென்னை நெடுஞ்சாலை உள்ள சலவாதி உயர்மட்ட பாலம் கட்டும் பணி வரும் 21ம் தேதி பூமி பூஜையுடன் மீண்டும் பணிகள் துவங்க உள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே சலவாதி பகுதி, தேசிய நெடுஞ்சாலைத்துறை (நகாய்) சார்பில், தொடர் விபத்துக்கள் நடக்கும் இடமாக, பல்வேறு ஆய்வுகளுக்கு பிறகு கண்டறியப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக சலாவதி பகுதி, தேசிய சாலை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அடையாளம் காணப்பட்டு, ரூ.40 கோடி செலவில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து கடந்த 2024ம் ஆண்டு இறுதியில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி ஆரம்பமானது. ஒரு பக்கம் நிலம் கையகப்படுத்தும் பணி துவங்கிய நிலையில், உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் ஒன்றரை ஆண்டுக்குள் முடிந்து, மக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று நகாய் சார்பில் உறுதி கூறப்பட்டது.
இதற்கிடையில் உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தின் மையப்பகுதியையொட்டி, இரு பக்கமும் சர்வீஸ் ரோடு போடுவதற்காக மெகா சைஸ் பள்ளம் தோண்டப்பட்டது.
இந்த பள்ளம் தோண்டப்பட்டு ஓராண்டு கடந்த விட்ட நிலையில், இதுவரை மேற்கொண்டு எந்த பணிகளும் நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது, உயர்மட்ட பாலம் அமைய உள்ள இடத்தில், மேம்பாலம் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. பாலத்திலிருந்து கீழ்நோக்கி வரும் சாலை அமைப்பதற்கான எந்த பணியும் நடைபெறவில்லை. உயர்மட்ட பாலம் மட்டும் அந்தரத்தில் நின்று பொது மக்களுக்கு காட்சி பொருளாகியுள்ளது.
ஒராண்டிற்கு மேலாகியும் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி அடுத்த கட்டத்திற்கு நகராமல் உள்ளது குறித்து நகாய் அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, பாலம் அமைப்பதற்காக இடம் கொடுத்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகவும், தற்போது இழப்பீடு தொகை முழுவதும் வழங்கிவிட்டதாகவும், விரைவில் பாலம் கட்டும் பணி துவங்கிவிடும் என்றும் கடந்த ஒரு மாத்திற்கு முன் நகாய் அதிகாரிகள் உறுதியுடன் தெரிவித்தும் எந்த பணியும் நடைபெறவில்லை.
தாமதம் குறித்து நகாய் அதிகாரிகள் தரப்பில் கேட்ட போது, 'சலாவதி உயர்மட்ட பாலம் அமைப்பதற்காக இடம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை முழுவதும் வழங்கப்பட்டுவிட்டது.
ஓராண்டாக பாலம் அமைக்கும் பணி நடைபெறாமல் போனதால், உயர்மட்ட பாலம் கட்டும் பணியை மேற்கொண்டிருந்த ஒப்பந்ததாரர், திண்டிவனம் அருகே உள்ள விக்கிரவாண்டியில் நடைபெறும் மேம்பால பணிக்காக தளவாடப்பொருட்களை மாற்றம் செய்துவிட்டார். தற்போது சலவாதி பகுதியில் நிலம் கொடுத்தவர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் பிரச்னை முடிந்துவிட்டது.
இதனால் சலாவதியில் நீண்ட நாட்களாக பணிகள் நடைபெறாமல் நின்று போயிருந்த உயர்மட்ட பாலம் கட்டும் பணிக்கான பூமிபூஜை வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் அனைத்தும் வரும் மே மாதத்திற்குள் முடிந்துவிடும். அதன் பிறகு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்படும்' என்று நம்பிக்கை தெரிவித்தனர்.
திண்டிவனம்-சென்னை சாலையிலுள்ள சலவாதியில் உயர்மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடித்து, போக்குவரத்து பயன்பாட்டிற்கு திறந்து விடுவதற்கு மாவட்ட நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே பொது மக்கள், வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.