Lifestyle and human interest
1.3 கிலோ கஞ்சா பறிமுதல் காரைக்காலில் 3 பேர் கைது
காரைக்கால்: காரைக்காலில் கஞ்சா விற்பனை செய்த சிறுவன் உட்பட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.
காரைக்கால் கோட்டுச்சேரி, மண்டபத்துார் பகுதியில் கஞ்சா விற்பதாக கிடைத்த தகவலின் பேரில், கோட்டுச்சேரி இன்ஸ்பெக்டர் ராமு தலைமையில், சப் இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசாருடன் நேற்று முன்தினம் அப்பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது போலீசாரை கண்டதும் தப்பிச் செல்ல முயன்ற மூன்று பேரை மடக்கி பிடித்து, விசாரித்தனர். அவர்கள் காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரன், 25; நர்முகன், 23, மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை சோதனை செய்ததில், இரண்டு பாலித்தீன் கவர்களில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதில், 1.3 கிலோ கஞ்சா இருந்தது.
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து மகேந்திரன், நர்முகனை கைது செய்தனர். 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கஞ்சா மற்றும் பைக், மூன்று மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.