அழுகிய நிலையில் ஆண் உடல் :விருத்தாசலத்தில் திடீர் பரபரப்பு
விருத்தாசலம்:விருத்தாசலத்தில் அழுகி, காய்ந்த நிலையில் கிடந்த ஆண் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விருத்தாசலம் ரயில்வே ஜங்ஷனில் இருந்து எருமனுார் செல்லும் இணைப்பு சாலையில், வானவில் டவுன்ஷிப் பின்புறம் அழுகிய நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்தது. தகவலறிந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் காந்தி மற்றும் போலீசார் சென்று விசாரித்தனர்.
அதில், இறந்து பல வாரங்களான நிலையில், சுட்டெரிக்கும் வெயிலில் அழுகி, எலும்புடன் காய்ந்த நிலையில் சடலம் இருந்தது. தாடி, மீசை எலும்பு பகுதியுடன் ஒட்டியிருந்ததால், ஆண் என்பது உறதி செய்யப்பட்டது.
ஆனால், அவரின் வயதை நிர்ணயம் செய்ய முடியவில்லை. அப்பகுதி இரவு நேரங்களில் மது அருந்தும் கூடாரமாக செயல்பட்டு வருகிறது. இதனால் மது அருந்த வந்த நபர் உடல்நலக்குறைவால் இறந்தாரா, தற்கொலையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என தெரியவில்லை.
சடலத்தை கைப்பற்றி, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும், மணலுார் வி.ஏ.ஓ., வீரசேகரன் புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.