Politics
விடுமுறை முடிந்து சென்னை படையெடுக்கும் மக்கள்... சாலைகள், பேருந்து நிலையங்களில் நெரிசல்
விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் கூட்டம் அதிகரிப்பு. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம், ரயில் நிலையங்களில் கூட்டம்; தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்.

விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் விடுமுறையை சொந்த ஊர்களில் கொண்டாடிவிட்டு, மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு மக்கள் திரும்பி வருகின்றனர். இதனால் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
தேசிய நெடுஞ்சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
விடுமுறை முடிந்து சென்னைக்கு திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. உளுந்தூர்பேட்டை, விக்கிரவாண்டி, செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து, ஊர்ந்தபடி கடந்து சென்றன.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும் கூட்டம் அதிகரித்துள்ளது. வெளியூர்களில் இருந்து பேருந்துகளில் வந்த பயணிகள், அங்கிருந்து மாநகரின் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல மாநகரப் பேருந்துகளுக்காக காத்திருந்தனர்.
போதிய அளவில் மாநகரப் பேருந்துகள் இயக்கப்படவில்லை என்றும், இதனால் நீண்ட நேரம் காத்திருந்து பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்புவதற்காக முக்கிய ரயில் நிலையங்களிலும் ஏராளமான பயணிகள் குவிந்தனர். ரயில்களில் போதிய இடம் கிடைக்காததால், பயணிகள் கூட்ட நெரிசலுக்கு இடையே பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.
திருவண்ணாமலையில் அரசுப் பேருந்தை வழிமறித்து வாக்குவாதம்
இதனிடையே, திருவண்ணாமலையில் கோவைக்கு முன்பதிவு செய்திருந்த பேருந்து வெகுநேரமாகியும் வராததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர். இதையடுத்து அங்கு வந்த அரசுப் பேருந்தை வழிமறித்து பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
பேருந்து குறித்து அதிகாரிகளிடம் முறையாக விளக்கம் கேட்டபோதும், உரிய பதில் அளிக்காமல் தங்களை அலைக்கழித்ததாக பயணிகள் குற்றம்சாட்டினர்.
வெளியூர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகளின் வசதிக்காக இன்றும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான பேருந்து சேவையுடன் சேர்த்து மொத்தம் **5,763 பேருந்துகள்** இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மாநகரப் பேருந்துகள் புறப்படும் பகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களுக்குச் சென்ற மக்கள் மீண்டும் சென்னை திரும்பி வரும் நிலையில், அவர்களின் தேவைக்கேற்ப போதுமான மாநகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றனவா என்பது குறித்து அமைச்சர் ஆய்வு செய்தார்.