Politics
குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்கும் உளவுப்பிரிவு போலீஸ்!

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''மாவட்டச் செயலர் பதவிக்கு முட்டி மோதுறாங்க...'' என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''தி.மு.க., தகவலா ஓய்...'' என கேட்டார் குப்பண்ணா.
''ஆமா... நாம் தமிழர் கட்சியில் இருந்து, தி.மு.க.,வுக்கு தாவிய முன்னாள் பிரதமர் பெயர் கொண்டவருக்கு, மாநில அளவுல பொறுப்பு குடுத்து கவுரவிச்சாங்க... அப்புறமா, அவர் பல சர்ச்சைகள்ல சிக்கியதால, பதவியை பறிச்சு ஓரங்கட்டிட்டாங்க...
''கோவையைச் சேர்ந்த இவர், சட்டசபை தேர்தல்ல போட்டியிட விரும்பினாரு... அவர் விரும்பிய தொகுதியில கரூர், 'மாஜி' அமைச்சர் களமிறங்கிட்டதால, 'சீட்' கிடைக்கலைங்க...
''இப்ப, கட்சி மறுசீரமைப்பில் கோவையை அஞ்சு மாவட்டங்களா பிரிச்சிருக்காங்க... இதுல, மத்தியில் அமையப் போற மாவட்டத்துக்கு செயலராக, இவர் முயற்சி பண்றாருங்க...
''இதுல என்ன வேடிக்கைன்னா, கரூர் மாஜியும் கோவையிலயே குடியேற விரும்புறதால, அவரும் அந்த மாவட்டச் செயலர் பதவி போட்டியில குதிச்சிருக்காராம்... 'யாருக்கு பதவி கிடைக்கும்'னு, கோவை தி.மு.க.,வினர் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''ராஜிவ்காந்தி, செந்தில் பாலாஜி எல்லாம் நல்லாயிருக்காங்கல்லா... சரி, அப்புறமா பேசுதேன்..'' என மொபைல் போனை, 'ஆப்' செய்தபடியே வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''பஞ்சமி நிலத்தை மீட்கணும்னு கேட்காவ வே...'' என்றார் .
''எந்த ஊருலங்க...'' என கேட்டார் அந்தோணிசாமி.
''பிரிட்டிஷ் ஆட்சி நடந்தப்ப, தமிழகம் முழுக்க தலித் மக்களுக்காக, 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களை குடுத்தாவ... இந்த நிலங்களை, அந்த சமுதாய மக்கள் தவிர, வேற யாருக்கும் விற்கக்கூடாது வே...
''ஆனா இப்ப, 'தமிழகத்துல வெறும் 1.10 லட்சம் ஏக்கர் தான் பஞ்சமி நிலங்கள் இருக்கு... இதுல, 17 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தான் ஆக்கிரமிப்பில் இருக்கு'ன்னு அரசு தரப்புல சொல்லுதாவ வே...
''இந்த நிலங்களை, விதிப்படி மற்ற சமுதாயத்தினருக்கு விற்க முடியாது... ஆனா, நிறைய பஞ்சமி நிலங்கள்ல, வேற சமுதாய மக்களுக்கு பட்டாகுடுத்திருக்காவ...
''இதனால, 'பஞ்சமி நிலங்களை த.வெ.க., அரசு மீட்டு, தலித் மக்களிடம் ஒப்படைக்கணும்'னு, பஞ்சமி நில மீட்பு கூட்டமைப்பினர் சார்பில், தமிழகம் முழுக்க கலெக்டர்களிடம் மனு குடுத்துட்டு இருக்காவ வே...'' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
''முதல்வர் தனிப்பிரிவுக்கு புகார் போயிருக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''நீலகிரி மாவட்டம், குன்னுார்ல உளவுப்பிரிவு போலீஸ்காரர் ஒருத்தர் இருக்காரு... இவருக்கு, எஸ்.பி., அலுவலகத்துல நல்ல செல்வாக்கு இருக்கு பா...
''சமீபத்துல ஒரு கடைக்கு தீ வச்சுட்டு தப்பியோடிய குற்றவாளியை, இந்த போலீஸ்காரரே போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைச்சிட்டு வந்திருக்காரு... கடை உரிமையாளரையும் வரச் சொல்லி, கட்டப்பஞ்சாயத்து பேசி வழக்கு பதிவு செய்யாம தடுத்துட்டாரு பா...
''அதேபோல, போலி ராணுவ அடையாள அட்டையுடன் மோசடியில் ஈடுபட்ட ஒருத்தரை கைது செஞ்ச விவகாரத்திலும், அந்த நபருக்கு ஆதரவா, இந்த போலீஸ்காரர் வந்து நின்னிருக்காரு... இதனால, ஸ்டேஷன் அதிகாரிகளே இவர் மீது கடுப்பாயிட்டாங்க பா...
''இவரை பத்தி எஸ்.பி., அலுவலகத்துல புகார் குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல... இதனால, இவரது அடாவடிகள் பத்தி முதல்வரின் தனிப்பிரிவுக்கே, சில போலீசார் புகார் அனுப்பிட்டாங்க... 'சீக்கிரமே இவரிடம் விசாரணை நடக்கும்'னு சொல்றாங்க பா...'' என முடித்தார் அன்வர்பாய்.
''ரியாஸ், கிளம்பலாமா வே...'' என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.