Politics
"ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை; காரணம்..." - ட்ரம்ப்
ஹார்முஸ் நெருக்கடியால் எண்ணெய் விலை உயர்ந்துள்ள நிலையில், ஈரான் போர் அமெரிக்க மிட் டேர்ம் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. | Trump says he has no regrets over Iran war, as rising oil prices and conflict create pressure ahead of US midterms.

ஈரான் போரைத் தொடங்கியதற்கு வருத்தமில்லை என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அணு ஆயுத அச்சுறுத்தல் குறித்தும் அவர் எச்சரித்துள்ளார்.
ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தியும் மூடிதான் இருக்கிறது. குறிப்பிட்ட கப்பல்களுக்கு மட்டும் அவ்வப்போது அனுமதி கிடைத்து வருகிறது.
ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடல் அமெரிக்கா, இஸ்ரேலைத் தாண்டி, உலக நாடுகளுக்கே பிரச்னையாக மாறியிருக்கிறது. ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடலால் பெரும்பான்மையான எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருக்கிறது.
இது உலக நாடுகளுக்கு எண்ணெய் கிடைப்பது... எண்ணெய் விலை உயர்வு போன்ற பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. இந்தப் பிரச்னைக்கு அமெரிக்காவும் விதிவிலக்கல்ல.
அமெரிக்க மக்கள் பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்பு வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவுள்ள மிட்-டேர்ம் தேர்தலில் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சியைப் பாதிக்குமோ என்கிற சந்தேகம் எழுந்து வருகிறது.
இந்த நிலையில், நேற்று ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்குக் கொடுத்த பேட்டியில் ட்ரம்ப், “ஈரான் போரைத் தொடங்கியதற்காக நான் வருத்தப்பட்டதே இல்லை.
ஜனநாயகக் கட்சி அமெரிக்காவில் ஆட்சிக்கு வந்துவிட்டால் தங்களால் சுலபமாக அணு ஆயுதத்தைப் பெற முடியும் என்று நினைத்துக்கொண்டு, என்னை ஆட்சியில் இருந்து தூக்குவதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் ஈரான் தீவிரமாகச் செய்து வருகிறது.
ஆனால், அவர்களுக்கு அணு ஆயுதம் ஒருபோதும் கிடைக்காது.
ஒருவேளை நாம் எதுவும் கண்டுகொள்ளாமல் இருந்தால், திடீரென ஈரான் அணு ஆயுதத்தைத் தயாரித்துவிட்டால் என்னவாகும்? அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள். நான் அவர்களோடு பழகியிருக்கிறேன். அவர்கள் அந்தச் சமயத்தை உறுதியாகப் பயன்படுத்துவார்கள்.
இஸ்ரேலையே முற்றிலும் அழித்திருப்பார்கள். மத்தியக் கிழக்கையே நிர்மூலமாக்கியிருப்பார்கள். ஏன், அமெரிக்காவின் சில நகரங்கள் மீதே தாக்குதல் நடத்தத் தொடங்கியிருப்பார்கள்” என்று பேசியிருக்கிறார்.
