Politics
துண்டுச் சீட்டு விவகாரம் : “நடந்தது என்ன?” - சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி!

தமிழக சட்டப்பேரவையில் திமுகவினர் பேசுவதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறிவிட்டு, ஒரு குறிப்பிட்ட 'துண்டுச் சீட்டு' வந்தவுடனே தங்களுக்குப் பேச சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அனுமதி மறுத்துவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அதற்குச் சபாநாயகர் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எந்த துண்டுக்கும், எந்தச் சீட்டுக்கும் அடிபடுகின்றவன் நான் அல்ல. நான் மீண்டும் சொல்கிறேன். அவ்வப்போது எனக்கு எழுகின்ற சந்தேகங்கள் தொடர்பாக, என்னுடைய துறை சார்ந்த சட்டப்பேரவை அலுவலர்களிடம் தெரிந்த சில குறிப்புகளை நான் கேட்டுப் பெறுகிறேன். உதாரணமாக, ஏற்கனவே சர்க்காரியா கமிஷன் பற்றி அவர் பேசியிருப்பதும், அமலாக்கத் துறை பற்றி அவர் பேசியிருப்பதும் அவை குறிப்புகளில் இருந்தால், அந்தக் குறிப்புகள் எந்த ஆண்டு, எந்த நாள் இந்த அவையில் பேசப்பட்டன என்ற விவரத்தை எனக்கு எடுத்துத் தாருங்கள் என்று நான் கேட்டிருந்தேன்.
ஏனென்றால், உடனடியாக விவாதத்திற்குத் தயாராகும்போது, அவை குறிப்புகளில் அந்த விவரங்கள் இருந்தால் அது எனக்குத் தெரியும். இருப்பினும், எந்த நாள், எந்தத் தேதியில் அந்த விவாதம் நடைபெற்றது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்காக அந்த விவரங்களைக் கேட்டிருந்தேன். அதற்குரிய துண்டுச் சீட்டுகளையே அவர்கள் எனக்கு வழங்கினார்கள். சபையை எப்படி நடத்துவது, யாரைப் பேச அனுமதிக்க வேண்டும், யாரைப் பேச அனுமதிக்கக் கூடாது என்பது தொடர்பாக யார் துண்டுச் சீட்டு தந்தாலும் சரி, சீட்டு தந்தாலும் சரி, அதை ஏற்கும் மனநிலையில் நான் எப்போதும் இருக்க மாட்டேன் என்பதை மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)
