Politics
கள்ளுக்கடை திறப்பு குறித்து ஆலோசனை அமைச்சர் விக்னேஷ் தகவல்
பழனி: ''தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, மதுவிலக்குத்துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
தமிழகத்தில் மதுக் கடைகளை, அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டாஸ்மாக் நிறுவனம் நடத்தி வருகிறது.
மதுக் கடைகளுக்கு ஒரு புறம் எதிர்ப்பு உள்ள நிலையில், கள்ளுக்கடைகளை திறக்க வேண்டும் என, பனை மற்றும் தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், இதுவரை இருந்த அரசுகள் அனுமதி அளிக்கவில்லை. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடந்த ஆண்டு கள் இறக்கும் போராட்டம் நடத்தினார்.
'அரசு மது விற்கும்போது, கள் விற்றால் என்ன?' என்பது, கள்ளுக்கடை திறக்க கோருவோரின் கேள்வியாக உள்ளது. இந்த சூழ்நிலையில், கள்ளுக்கடை திறப்பது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தொடர்பாக, திண்டுக்கல் மாவட்டம் பழனியில் நேற்று அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர் களிடம் கூறியதாவது:
டாஸ்மாக் ஊழியர்களின் பிரச்னைகளை தீர்க்க, அரசு முனைப்போடு உள்ளது. மதுபான கடைகளில் பாட்டில் உடைவது குறித்த பிரச்னைக்கு, நடவடிக்கை எடுக்கப்படும். அரசுக்கு தொழிலாளர்கள் மீது வெறுப்பு இல்லை. பழனியில் ஆர்.எப்., சாலை பகுதியில் உள்ள மதுபானக் கடை, பொது மக்களுக்கு இடையூறாக இருந்தால், மாற்று இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கள்ளுக் கடைகள் திறப்பதில் உள்ள சாதக பாதகங்கள், முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு உள்ளன. கேரளாவில் சில கள்ளுக்கடைகளுக்கு, இங்கிருந்து சாராயம் கொண்டு செல்வதாக தெரிய வந்துள்ளது. எனவே, தமிழகத்தில் கள்ளுக்கடைகள் திறப்பது குறித்து, ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

