காஞ்சிபுரத்தில் 15ம் நூற்றாண்டு சதிக்கல் சிற்பம் கண்டெடுப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், 15ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சதிக்கல் சிற்பம் நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம் ஒன்றியம், புத்தேரி கிராமத்தில், வரலாற்று ஆய்வாளரும், சென்னை துாய தாமஸ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தமிழ்த்துறை உதவி பேராசிரியருமான அன்பழகன் நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது புத்தேரி சாலையோரம் சதிக்கல் சிற்பம் ஒன்றை கண்டறிந்தார்.
இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் மற்றும் உதவி பேராசிரியர் அன்பழகன் கூறியதாவது:
புத்தேரி கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட சதிக்கல் சிற்பம், 46 செ.மீ., உயரமும், 36 செ.மீ., அகலமும் உள்ளது. இந்த சதிக்கல் சிற்பத்தில், வீரன் ஒருவருடன், அவரது மனைவி இடப்புற பகுதியில் உள்ளார்.
வலப்புறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் நிற்கும் வீரன், இரண்டு கைகளையும் வணங்கிய நிலையில் உள்ளது. வீரனின் இடப்பக்கம் நிற்கும் பெண்சிற்பத்தின் இடதுகை தொங்கவிடப்பட்டுள்ள நிலையிலும், வலதுகை மலர்மொட்டு ஒன்றை உயர்த்தி பிடித்துள்ளது.
இருவரின் கைகள் தோள்கள், தோள்பட்டை கழுத்து மற்றும் மார்புப் பகுதிகளில் அணிகலன்களும் காதுகளில் மிகத் தடிமனான காதணிகளும் காணப்படுகின்றன. பட்டாடை அணிந்துள்ளள் இருவரின் தலையில் உள்ள கொண்டைகளும் இடப்பக்கம் உள்ளது. இச்சிற்பத்தில் சில பகுதிகள் சிதைந்துள்ளன.
கல்வெட்டு எழுத்துகள் எதுவுமற்ற இச்சதிக்கல் சிற்பத்தின் காலம் கி.பி.15ம் நுாற்றாண்டாக இருக்கலாம்.
இத்தகவலின் உண்மைத் தன்மையை காஞ்சிபுரம் அரசு அருங்காட்சியகக் காப்பாட்சியர் சு.உமாசங்கர் உறுதி செய்துள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.