இலுப்பநத்தம் ஊராட்சிக்கு கூடுதல் குடிநீர் கோரிக்கை தினமும் 1.5 லட்சம் லிட்., பற்றாக்குறை
மேட்டுப்பாளையம்: இலுப்பநத்தம் ஊராட்சிக்குட்பட்ட வெங்கட்ராமபுரம், அண்ணா நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகளுக்கு போதிய குடிநீர் கிடைக்காததால் மக்கள் அவதிப்படுகின்றனர். தினமும் 1.5 லட்சம் லிட்டர் குடிநீர் கூடுதலாக வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
காரமடை ஊராட்சி ஒன்றியம் இலுப்பநத்தம் ஊராட்சியில் வெங்கட்ராமபுரம், அண்ணா நகர் உட்பட, 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. மூலையூரில் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் எடுத்து, அத்திட்டத்தில் குடிநீர் வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தில், இலுப்பநத்தம் ஊராட்சிக்கு தினமும் 9 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். ஆனால் ஏழரை லட்சம் லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால், குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதுகுறித்து வெங்கட்ராமபுரம் மக்கள் கூறியதாவது:
வெங்கட்ராமபுரத்தில், 45 குடும்பங்கள், அண்ணா நகரில், 65 குடும்பங்கள் என, மொத்தம், 110 குடும்பங்கள் உள்ளன. இந்தப் பகுதிக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஆற்றுத் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டது. தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறைதான் வழங்குகின்றனர்.
மழையின்றி போர்வெல்களும் வற்றி விட்டதால், ஆற்று தண்ணீரை மட்டுமே நம்பியுள்ளோம். குடிநீர் பற்றாக்குறையை போக்க புதிதாக போர்வெல் போட, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் கூறினர்.
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது: ஊராட்சிக்கு குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டிய, ஆற்றுத் தண்ணீர் முழு அளவில் கிடைப்பதில்லை. ஊராட்சியில், 29 போர்வெல்கள் உள்ளன. அவற்றில் ஆறு போர்வெல்களில் மட்டும் தண்ணீர் உள்ளது. 23 போர்வெல்கள் வறண்டு விட்டன.
போர்வெல் தண்ணீரை வைத்து, ஆறு இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு வழங்கும் இயந்திரங்கள் அமைத்து, நீர் வினியோகம் நடக்கிறது.
குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், குடிநீர் வடிகால் வாரியம், கூடுதலான தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் போர்வெல் அமைக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு நிர்வாகத்தினர் கூறினர்.