திருவள்ளூர் சாலையில் மண் குவியல் நகராட்சி ஊழியர்கள் அகற்றம்
திருவள்ளூர்: திருவள்ளூர் நகரத்தில், சாலை மைய பகுதி மற்றும் சாலையோரங்களில் குவிந்துள்ள மண் குவியலை, நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
திருவள்ளூர் நகரத்தில் உள்ள பெரியகுப்பத்தில் இருந்து ஜெ.என்.சாலை, நேதாஜி சாலை வழியாக, தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
சவுடு மண் குவாரிகளில் இருந்து மண் ஏற்றி வரும் லாரிகள், அதிகளவில் இச்சாலையில் பயணம் செய்கின்றன. வேகமாக செல்லும் போது, அந்த லாரிகளில் ஏற்றிச் செல்லப்படும் மண், சாலைகளில் பரவி, சாலை மைய தடுப்பு பகுதியிலும், சாலையோரங்களிலும் குவிந்துள்ளது.
இதனால், சாலையில் வேகமாக செல்லும் வாகனங்களால், காற்றில் மண் துகள்கள் பறந்து, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகளின் கண்களை பதம்பார்க்கிறது. இதன் காரணமாக, இருசக்கர வாகன ஓட்டிகள் தடுமாறி விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
நெடுஞ்சாலை துறையினர், சாலையில் தேங்கிய மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்காமல், அலட்சியமாக இருந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் மாரிச்செல்வி, திருவள்ளூர் நகரில் சாலையில் உள்ள மண் குவியலை அப்புறப்படுத்த, திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் தாமோதரனுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் நேற்று, ஜெ.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை மைய தடுப்பு பகுதி மற்றும் சாலையோரம் இருந்த மண் குவியலை அகற்றினர்.