சித்திரங்குடி சரணாலயம் நீர்வரத்து கால்வாய் துார்ந்து பறவைகள் வருகை இன்றி வெறிச்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தில் நீர்வரத்து கால்வாய் துார்ந்தும், சீமைக்கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் பறவைகள் வருகையின்றி வெறிச்சோடியுள்ளது. சரணாலயத்தை துார்வாரி மேம்படுத்த வேண்டும். சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் 1989ம் ஆண்டு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு 40 ஹெக்டேரில் அமைந்துள்ளது. இங்குள்ள கருவேல மரங்களில் பலவகை புலம்பெயர்ந்த பறவைகள் கூட்டை காணலாம்.
சரணாலயத்திற்கு ஆஸ்திரேலியா, நேபாளம், தாய்லாந்து உள்ளிட்ட வெளி நாடுகளில் இருந்து கூழைக்கடா, கரண்டி மூக்கன், நத்தை கொத்தி நாரை உள்ளிட்ட ஏராளமான பறவைகள் ஆறு மாதங்கள் வரை தங்கி இனப்பெருக்கம் செய்த பின் திரும்புவது வழக்கம்.
இவற்றுடன் நீர் காகம், மீன்கொத்தி ஒற்றை வால் நாரை உள்ளிட்ட உள்நாட்டு பறவைகளும் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோர் சென்று வந்தனர்.
சரணாலயம் முறையாக பாரமரிக்கப்படாமல் கண்மாய்க்கான நீர்வரத்து கால்வாய் துார்ந்து விட்டதாலும், போதிய மழை பெய்யாததாலும் தண்ணீர் வரத்து தடைப்பட்டு கடந்த சில ஆண்டுகளாகவே கண்மாய் நிரம்பாமல் உள்ளது.
இதனால் வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் எண்ணிக்கையும் குறைய துவங்கியது. சித்திரங்குடி கண்மாயில் மழை பெய்தால் மட்டுமே தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. வரத்து கால்வாயில் தண்ணீர் வருவது கிடையாது.
ஆனால் பறவைகள் வராவிட்டாலும் சரணாலயத்தில் உள்ள பார்வையாளர் அரங்கம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வனத்துறையினர் தொடர்ந்து பராமரிக்கின்றனர். ஆனால் பறவைகள் வருவதில்லை.
தற்போது கண்மாய் பகுதி துார்வாரப்படாமல் இருப்பதால் அங்கு இருந்த மரங்கள் அனைத்தும் பட்டுப்போனது. சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து ஆக்கிரமித்துள்ளது. இதனால் பறவை இனங்கள் அழியும் நிலை ஏற்படுகிறது. புகழ்பெற்ற சித்திரங்குடி பறவைகள் சரணாலயத்தை பராமரிக்க வேண்டும் என்று மக்கள் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இது பறவைகள் சரணாலயமா, அல்லது சீமைக்கருவேல மரத்தால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள சரணாலயமா என்று பேசும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே சரணாலயத்தில் பறவைகள் வசிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.