Sport
கிரிக்கெட் ரசிகர்களுக்கு குட் நியூஸ்… மீண்டும் களமிறங்கும் ஹர்திக் பாண்டியா..

2027 - இல் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயாராகி வருகிறது
இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் போட்டிக்குத் திரும்பத் தயாராகி வருகிறார். ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக புதுச்சேரியில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா 'ஏ' அணியில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.
இருப்பினும், அவரது பங்களிப்பு உடற்தகுதிச் சான்றிதழைப் (Fitness Clearance) பெறுவதைப் பொறுத்தே அமையும். 32 வயதான பாண்டியா, ஐபிஎல் 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியபோது முதுகில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு மற்றும் தொடைப் பகுதி காயங்கள் காரணமாகப் பல போட்டிகளில் பங்கேற்கவில்லை.
அதைத் தொடர்ந்து, ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடருக்கு முன்னதாக ஏற்பட்ட கால் காயத்தால், அவர் போட்டிகளில் இருந்து விலகி பெங்களூரில் உள்ள பிசிசிஐ (BCCI) மையத்தில் தீவிர சிகிச்சையில் இருந்தார்.
2027 -ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியா ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பைத் தொடருக்கு இந்திய அணி தயாராகி வரும் நிலையில், பாண்டியாவின் இந்த வருகை அணிக்கு பெரும் பலமாகப் பார்க்கப்படுகிறது. 2023 உலகக்கோப்பையில் காயம் காரணமாக பாண்டியா பாதியிலேயே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியில் சிறந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, இதுவரை 94 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1,904 ரன்களும் 91 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். மேலும், கடந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா வெல்வதற்கும், சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரில் 9 விக்கெட்டுகளுடன் 217 ரன்கள் குவித்து இந்தியா சாம்பியன் பட்டம் வெல்வதற்கும் மிக முக்கியமான பங்காற்றினார்.
அக்டோபர் 6 முதல் 11 வரை புதுச்சேரியில் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக நடைபெறும் ஒருநாள் தொடரில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணியில் பாண்டியா இடம்பெறவுள்ளார். இதில் சிறப்பாகச் செயல்படும் பட்சத்தில், அவர் மீண்டும் இந்திய முதன்மை அணியில் இணைந்து விளையாட அதிக வாய்ப்புகள் ஏற்படும்.
