மேலுார் -- காரைக்குடி 4 வழிச்சாலையில் பிராமணம்பட்டி டோல்கேட்டில் சோதனை வாகன கட்டண வசூலிப்பு துவங்கவில்லை

திருப்புத்துார்: மேலுார்- - காரைக்குடி நான்கு வழிச்சாலையில் பிராமணம்பட்டி சுங்கச்சாவடியில் வாகன கட்டணத்தொகைக்கான சோதனை ஓட்டம் துவங்கியுள்ளது. வாகனங்களில் கட்டணம் வசூலிப்பதற்கான நாள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.
மேலுார் - -காரைக்குடி நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை எண் : 338 சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் வழியாக செல்கிறது. ஆறு ஆண்டுகால திட்டப்பணி பூர்த்தியடைந்த நிலையில் தற்போது வாகனங்கள் இந்த நான்கு வழிச்சாலையில் செல்லத் துவங்கியுள்ளன. இந்த ரோட்டில் திருப்புத்துாரிலிருந்து 6 கி.மீ., துாரத்தில் பிராமணம்பட்டியில் சுங்கச்சாவடி உள்ளது. இருபுறமும் தலா நான்கு வழிகளில் வாகனங்கள் செல்லும்படியாக அமைக்கப்பட்டுள்ளது.
சென்சார் மூலம் இயங்கும் இந்த சுங்கச்சாவடியில் வாகனங்கள் வந்து நின்றவுடன் திரையில் கட்டணத்தொகை தெரியும். தானாக கட்டணம் வசூலித்த பின் வாகனம் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. இதுபோன்று இருபுறமும் தலா 3 வழிகளில் சென்சார் முறையில் தானியங்கியாக ஆட்கள் இல்லாமல் வாகன கட்டணம் வசூலிக்கப்பட்டு தணிக்கையாகிறது.
இருபுறமும் முதல் வழியில் பணமாக கட்டணம் செலுத்தும் வகையில் பணியாளர்களுடன் சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் வகையில் உள்ளது. இந்த தணிக்கையில் பாஸ்டாக்கில் பணம் இல்லாத வாகனங்கள் செல்லலாம். சில நாட்களாக இந்த டோல்கேட்டில் வாகனங்கள் தணிக்கை செய்யப்படுகிறது. சோதனை ஓட்டமாக சரியான கட்டணத்தை காட்டுகிறதா, வாகன அனுமதியாகிறதா என்பதை வைத்து ஸ்கேன், காமிரா உள்ளிட்ட கருவிகள் செயல்பாடு சோதிக்கப்படுகிறது.
சுங்கச்சாவடியில் வழக்கமாக காணப்படும் கூரை வசதி இங்கு இல்லை. மற்ற சுங்கச்சாவடி போன்றே, கழிப்பறை, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. மதுரையிலிருந்து வரும் டூ வீலர்கள் செல்லும் பாதையில் தூண் இடைஞ்சலாக உள்ளதாக பயணிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுமேலாளர் சேந்தன் கூறுகையில், ''தற்போது சுங்கச்சாவடியில் கட்டணத்திற்கான வாகனத்தணிக்கை சோதனை ஓட்டம் நடந்து வருகிறது. அதிகளவில் வாகனங்கள் வரத்து உள்ளது. ஆம்புலன்ஸ் வருகையும் கூடுதலாக உள்ளது.
சோதனை ஓட்டம் முடிந்த பின் கட்டண வசூல் துவங்கும். அதற்கான தேதி பின் அறிவிக்கப்படும். ரோடுகளில் பாதுகாப்பு வசதி அதிகரிக்கும் பணியில் கவனம் செலுத்தப்படுகிறது. ரோட்டோரங்களில் மரங்கள் வளர்ப்பு, மண் சரிவில் செடிகள் வளர்ப்பு நடந்து வருகின்றன,'' என்றார்.